வாசிங்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15, 2019) தான் சர்வதேச பன்னாட்டு நிதியமான ஐ எம் எஃப் (IMF - International Monetary Fund), 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருக்கும் என தன் மறு கணிப்பை வெளியிட்டது. நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் க்ரிஸ்டாலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva), இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார்.
"இந்தியா தன் பொருளாதாரத்தின் அடிப்படைகளை (Fundamentals) சரி செய்ய வேலை பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன. இந்திய நிதித் துறையில், குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து இருக்கிறது. வங்கிகளை ஒருங்கிணைக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் எல்லாம் சில பிரச்னைகளை தீர்க்க உதவும்" எனச் சொல்லி இருக்கிறார்.
மேலும் "இந்தியாவில் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் காரணிகளைத் தொடர்ந்து சரி செய்ய வேண்டும். இந்திய மனித வளத்தில் முதலீடு செய்வது மிக முக்கியமானது முதன்மையானது. அதோடு இந்திய பெண்கள் தொடர்ந்து வெளியே பணிக்கு வர வேண்டும். இந்தியாவில் நிறைய திறமையான பெண்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வீட்டிலேயே முடங்கி விடுகிறார்கள்" எனவும் சொல்லி இருக்கிறார்.
கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவாக இருந்து இருக்கிறது. இந்த நடப்பு ஆண்டுகளுக்குக் கூட சர்வதேச பன்னாட்டு நிதியம் இந்தியாவுக்கு கொஞ்சம் வலுவான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பைக் கொடுத்து இருக்கிறோம் எனவும் சொல்லி இருக்கிறார் க்ரிஸ்டாலினா. மேலும் உலக நாடுகளைப் போல இந்தியாவும் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டு வருகிறது. எனவே ஆறு சதவிகிதத்துக்கு கொஞ்சம் அதிகமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைக் காணலாம். இந்தியாவில் அடிப்படைக் கொள்கை சீர் திருத்தங்கள் அவசியம். இந்த சீர் திருத்தங்கள் தொடரும் என எதிர்பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் க்ரிஸ்டாலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva).