என்னதான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், நம்மவர்களின் ஆசை மட்டும் அடங்குவதில்லை. அதன் விளைவாக பண்டிகை காலத்திற்கு முன்னதாக தங்க நகை கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் கூட்டம் குறைந்துள்ளதாக நகைக் கடை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிலும் பலவிதமான சலுகை, தள்ளுபடி, பரிசு என கண்னை பறிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டும் வருகிறது.
இருப்பினும் கடைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
தங்கம் விலை மூன்றாவது நாளாக குறைவு
தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இதற்கு உலகளாவிய நடவடிக்கையும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில், 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த மாதம் 40,000 ரூபாய்க்கும் மேல் சென்ற நிலையில், தற்போது அந்த உயரத்திலிருந்து சுமார் 2,150 ரூபாய் குறைந்து, 37,915 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே கிலோ வெள்ளியின் விலை 45,536 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே தங்கத்தின் விலையானது டாலரில் 1488 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.
விலை குறைவுக்கு என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தைகளில் உள்ள முன்னேற்றம் என்றும், இது உலகளாவிய பங்கு சந்தைகளை உற்சாகப்படுத்தியதாகவும், இது சந்தைக்கு ஒரு சாதகமான நிலையை கொடுத்ததாகவும், இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை, பங்கு சந்தையின் பக்கம் திருப்பியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது என்றும் கருதப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாகவே அவ்வப்போது தங்கத்தின் விலை ஏற்றம் கண்டாலும், சராசரியாக பார்க்கும் போது விலை குறைந்தே காணப்படுகிறது.
பேச்சுவார்த்தை இன்னும் முழுமையடையவில்லை
என்னதான் அமெரிக்கா சீனாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடந்து வந்தாலும், ஒரு தெளிவான முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்பதே உண்மை. இதனாலேயே அவ்வப்போது ஏற்றம் கண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் இன்று இரு நாடுகளின் பேச்சு வார்த்தைகளிலும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் ஒப்பந்தம் குறித்தான நம்பிக்கையுடன் குரல் கொடுத்தார். இதனால் திட்டமிட்டப்படி பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்தால், டிசம்பரில் வரி உயர்வு இருக்காது என்றும் வெள்ளை மாளிகையின் ஆலோசகர் லாரி குட்லோ கூறியுள்ளார்.
தேவை அதிகரிக்குமா?
இதே இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பருவமானது விலை குறையும் பருவம், ஆனால் வழக்கமான பண்டிகை நாட்களை போல இந்த முறையும் தேவை அதிகரிக்குமா? ஏனெனில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில் இந்த முறையும் வழக்கம் போல தேவை இருக்குமா? விலை குறையுமா? என்ற கேள்வி எழுகிறது. எப்படி எனினும் சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இந்திய சந்தையிலும் விலை குறையலாம் என்றும், இதே ஜூவல்லரி விலையை பொறுத்தவரை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை, ஏனெனில் தீபாவளி சமயத்திலாவது தேவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.