கடந்த 18 அக்டோபர் 2019, வெள்ளிக்கிழமை அன்று இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை 767.85 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 19 & 20 அக்டோபர், வழக்கம் போல சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் சந்தையில் வர்த்தகம் நடைபெறவில்லை.
21 அக்டோபர் 2019, திங்கட்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று தான் அந்த முறைகேடு புகாரும் வந்தது.
அந்த முறைகேடு புகாரின் பெயரில் சந்தை இன்று தான் தன் விலை இறக்கத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. அப்படி என்ன பிரச்னை நடந்துவிட்டது, ஏன் இன்ஃபோசிஸ் பங்கு விலை இவ்வளவு சரிந்து வர்த்தகமாகி வருகிறது..? வாருங்கள் பார்ப்போம்..!
பங்கு விலை
தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை, சுமாராக 650 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 767 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த பங்கு, இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமாராக 75 ரூபாய் சரிந்து 691-க்குத் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. அதோடு இன்றைய குறைந்த பட்ச விலையாக சுமார் 645-ஐத் தொட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
52 வார சரிவு
இந்த பங்கின் 52 வார குறைந்தபட்ச விலை 26 நவம்பர் 2018 அன்று தொட்ட 599 ரூபாய் தான். அந்த விலையை இப்போது இன்ஃபோசிஸ் மீண்டும் தொட்டு விடுமோ..? எனவும் பயந்து கொண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள். கடந்த ஜூலை 12, 2019-க்குப் பிறகு ஒரு நாள் கூட இன்ஃபோசிஸ் தன் 750 ரூபாய் என்கிற லெவலுக்குக் கீழ் வர்த்தகம் நிறைவடைந்தது இல்லை. ஆனால் இப்போது ஒரே அடியாக 650 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
காரணம்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் தான் செய்து இருக்கிறார்களாம். இப்படி இன்ஃபோசிஸ் உயர் அதிகாரிகள் மீது பொது வெளியில் குற்றம் சுமத்துவது சில இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களே தான் என ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
இருவர் மீது புகார்
அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக முறையற்ற மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள், இந்த நேர்மையான ஊழியர்கள். கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று தான் இந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, இந்த நேர்மையான ஊழியர்கள், கடிதம் எழுதி இருக்கிறார்களாம். சமீபத்தில் தான் IANS செய்தி நிறுவனத்துக்கு இந்த கடிதம் கிடைத்ததாம்.
செலவு குறைப்பு
கடந்த காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விசா கட்டணச் செலவுகள் போன்ற பல செலவுகளை, முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அழுத்தம் கொடுத்து இருக்கிறார்களாம். உதாரணமாக விசா கட்டணத்துக்கு 10,000 ரூபாய் செலவு செய்து இருந்தால், 5,000 அல்லது 6,000 ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது. இப்படி செலவுகளைக் குறைத்தால் லாபம் கூடத் தானே செய்யும். அதைத் தான் இன்ஃபோசிஸ் நிறுவனமும் செய்து இருக்கிறது என்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள். இதெல்லாம் ஜு ஜு பி என்கிற ரேஞ்சில் ஒரு மெகா மோசடியைச் செய்து இருக்கிறது இன்ஃபோசிஸ் என்கிறார்கள் அந்த ஊழியர்கள்.
350 கோடி வருமான முறைகேடு
இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சில ஒப்பந்தம் மூலமாக 50 மில்லியன் டாலர் (சுமார் 350 கோடி ரூபாய்) பணம் வந்திருக்கிறது. வந்த போது அதை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் சில பல காரணங்களுக்காக வந்த 50 மில்லியன் டாலரை மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வந்த 50 மில்லியன் கையில் இல்லை. இந்த இடத்தில் தான், 50 மில்லியனை திருப்பிக் கொடுத்ததை கணக்கில் கொண்டு வர வேண்டாம் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் சொல்கிறார்கள் அந்த நேர்மையான ஊழியர்கள்.
கணக்கு
ஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும்.
மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம்.
உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15.
இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். இன்ஃபோசிஸ் இரண்டையும் செய்து இருக்கிறது. 1. விசா கட்டணம் போன்ற பல செலவுகளை முறையாக கணக்கில் கொண்டு வரவில்லை எனவே இன்ஃபோசிஸ் சொல்லும் கணக்குப் படி செலவு குறைந்து இருக்கிறது. 2. வராத 50 மில்லியன் டாலர் (350 கோடி ரூபாய்) வருமானத்தை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ஆக இன்ஃபோசிஸ் கணக்குப் படி வருமானம் அதிகரித்து இருக்கிறது.