டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்றும் பல செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அரசு அதை மறுத்து வந்தாலும் அதற்கான சரியான முடிவுகள் அப்போது எதுவும் கூறப்படவில்லை.
இந்த நிலையில் இதெல்லாம் உண்மையில்லை என்று கூறும் விதமாக மத்திய அரசு தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அப்படி என்ன அறிக்கை என்று கேட்கிறீர்களா? பொதுத்துறையை சேர்ந்த, இந்த இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் இணைப்பு பற்றிய அறிக்கை தான் அது.
கடன் பிரச்சனை
பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் இந்த நிறுவனங்கள் பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே, அதிலும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சுமார் 90,000 கோடி ரூபாயை தாண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே எம்.டி.என்.எல் நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி கடன் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடனை குறைக்கவும், செலவினைக் குறைக்கவும், இந்த நிறுவனங்களை மறுசீரமைக்கவும் மத்திய அரசு இப்படி எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் போட்டி
இந்த நிறுவனத்தின் நஷ்டத்திற்கு அதிகரித்து வரும் போட்டியும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை கூட்டுவதற்காக கட்டணம் குறைப்பு, டேட்டா தொடர்பான சலுகைகள், ஏன் ஒரு கட்டத்தில் இலவச கால்கள் என பல சலுகைகளையும் வழங்கி வந்தன. அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் பொதுத்துறை நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி நஷ்டத்தினையே கண்டன.
என்ன தான் தீர்வு?
நஷ்டத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவையை அளித்து வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், இன்றளவிலும் 4ஜி சேவைக்கு மாறாததே இதன் முக்கிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் இந்த 4ஜி சேவையை ஊக்கப்படுத்தவும், கடன்களை குறைக்கவுமே மத்திய அரசு இணைப்பு என்ற ஆயுதத்தை எடுத்துள்ளது. மேலும் இந்த மறுமலர்ச்சி திட்டம் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்களின் நிலைமை தான் என்ன?
பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2009 - 2010 முதல் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்து வருவதாகவும், இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் 1.76 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர் என்றும், இதே எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்களை உள்ளனர். இந்த நிலையிலேயே இந்த இரு நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி கடன்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களும் தன்னார்வ விருப்ப ஓய்வுத் திட்டத்தினை கொண்டு வருவதாகவும் கூறி வந்தது.
இணைப்பால் மறுமலர்ச்சி
இந்த இணைப்புடன் இந்த நிறுவனத்திற்கான மறுமலர்ச்சி திட்டத்திற்கும் பல வழி வகுத்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக 4ஜி சேவைக்களுக்கான ஸ்பெக்ட்ரம் நிர்வாக ஒதுக்கீடு, மத்திய அரசால் நீட்டிக்கப்பட்ட இறையாண்மை உத்தரவாததுடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டல், கடன் மறு சீரமைப்பு, தன்னார்வ ஓய்வூதிய திட்டம், இதன் மூலம் செலவினங்களை குறைத்தல், மேலும் இந்த நிறுவங்களுக்கு உள்ள சொத்துக்களை பணமாக்குதல் உள்ளிட்ட பல உத்திகளைக் கூறியுள்ளது மத்திய அரசு.
மத்திய அமைச்சகம் ஒப்புதல்
துவண்டு போன நிலையில் உள்ள இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களை மேம்படுத்த முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்கு அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் பிராண்ட் பேன்ட் சேவை மற்றும் இன்னும் பிற சேவைகளை வழங்குவதற்கு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு 4ஜி சேவைக்கான வழியையும் அமைச்சரவையின் இந்த மறுமலர்ச்சி திட்டம் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலதன முதலீடு
நெருக்கடியில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு மூலதனத்தை செலுத்துவதன் மூலம் இந்த நிறுவனங்கள் நிச்சயம் மேம்படும் என்றும், இதன் படி மூலதனமாக 20,140 கோடி ரூபாய் உட்செலுத்தப்படும் என்றும், இதே ஸ்பெக்ட்ரம் மதிப்புக்கு 3,674 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து அரசே பட்ஜெட் நிதி மூலம் ஏற்கும் என்றும், இதன் மூலம் 4ஜி சேவையை மேம்படுத்தலாம் என்றும், இதனால் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டம்
இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களுமே செலவினை குறைக்க ஆரம்பம் முதல் கூறி வரும் முக்கிய திட்டங்களில் தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் பெரும் பகுதி செலவினங்கள் மிச்சமாகும் என்றும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கவும், மத்திய அரசால் நிதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மத்திய அரசிடம் இருந்து 17,169 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சொத்துகளை பணமாக்குதல் திட்டம்
இத்திட்டத்தின் படி, முன்மொழியப்பட்ட சொத்துகளை விற்று பணமாக்குதல் திட்டம் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2018 நிலவரப்படி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும், இதே 3,760 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மூலம் பணமாக்கப்படும் என்றும், இதன் படி சில இடங்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடலாம் என்றும் கூறப்படுகிறது.