கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய பொருளாதாரம் ஒரு மாறுதல் கட்டத்தில் உள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் விரைவில் மீண்டு வரும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார்.
இந்தியாவின் வளர்ச்சி விரைவில் மீண்டு வரலாம். நிறைய சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதாரத்தில் மாற்றம் உள்ளது, குறிப்பாக ஜிஎஸ்டி சீர்திருத்தம், திவால் சட்ட ஆகியவற்றில் பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கூறிய சீர்திருத்தங்கள் அனைத்தும் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக நாம் ஒரு மாறுதல் காலகட்டத்தில் இருக்கிறோம். அதே போல கார்ப்பரேட் துறையிலும் நிறைய தூய்மைப்படுத்தல் நடவடிக்கை நடந்துள்ளது என்றும் எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து கூறியுள்ள ரஜ்னிஷ் குமார், இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் வளர்ந்த பிரிவில் வரவில்லை, மேலும் இன்னும் தனிநபர் வருமானம் குறைவாகவே உள்ளது. எனினும் இந்தியாவில் இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், இவ்வாறு வளர்ச்சிக்கான பாதையில் செல்லும்போது சில பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம் தான், எனினும் வரும் காலங்களில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் பல சவால்களை எதிர்கொள்ளும் பல வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், குறைந்தபட்சம் இந்தியாவில் அந்த மாதிரியான சவால்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் என் பார்வையில் இந்திய பொருளாதார வளர்ச்சியை பொறுத்த வரை அது கீழே உள்ளது. எனினும் அது தற்போது உயரும் நிலையில் தான் உள்ளது, ஏனென்றால் துறை வாரியாக பார்த்தால், நடப்பு ஆண்டில் விவசாயம் நன்றாகவே உள்ளது. இது கடன் அடிப்படையில் கூட நன்றாகவே உள்ளது என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். எனினும் உற்பத்தி வளர்ச்சி மெதுவாகவும் மற்றும் தனியார் துறை முதலீடுகளும் மெதுவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
எனினும் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு ஒவ்வொரு வீட்டின் வாசல்களுக்கும் வங்கியைக் கொண்டு வந்துள்ளது என்றும், இந்த கணக்குகளை செயல்படுத்துவது 90 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்றும் குமார் கூறியுள்ளார். மேலும் இந்த கணக்குகளின் சராசரி இருப்புத் தொகையானது 1,900 ரூபாயை தொட்டுள்ளது என்றும், கடந்த ஜூன் மாதத்தில் இந்த சேமிப்பு கணக்கில் மொத்த நிலுவைத் தொகை 230 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.