இது நம் இந்தியாவில் பண்டிகை காலம். குறிப்பாக வட இந்தியாவில் தந்தேராஸ், தென் இந்தியாவில் தீபாவளி என ஒரே காலத்தில் இந்தியா முழுக்க பல பண்டிகைகள் கொண்டாடப்படும் காலம் என்பதால் தங்க நகைகள் வியாபாரமும், வழக்கமாக இந்த கால கட்டங்களில் கலைகட்டும்.
வழக்கமாக இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் சுமாராக 40,000 கிலோ தங்கம் வியாபாரம் ஆகும் என நகைக் கடைக்காரர்கள் சங்கம் சொல்லி இருந்தது.
ஆனால் இந்த முறை பொருளாதார மந்த நிலை, மக்கள் கையில் பணம் இல்லாதது மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பது போன்ற காரணங்களால், சுமார் 20,000 கிலோ தங்கம் மட்டுமே வியாபாரம் ஆகலாம் எனக் கணித்து இருந்தார்கள் Indian Bullion and Jewellers Association.
30,000 கிலோ
ஆனால் Indian Bullion and Jewellers Association கணிப்பை பொய் ஆக்கும் விதத்தில் சுமார் 30,000 கிலோ தங்கம், இந்த தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகை காலத்தில் வியாபாரம் நடந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் Indian Bullion and Jewellers Association அமைப்பினர்கள். இருந்தாலும் கடந்த 2018-ம் ஆண்டின் வியாபாரத்துடன் ஒப்பிடுகையில் இது 25 சதவிகித வியாபார சரிவு எனச் சொல்கிறார்கள்.
நல்ல வியாபாரம்
இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இவ்வளவு வியாபாரம் ஆகும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என இந்திய புல்லியன் மற்றும் நகைக்கடை சங்க தேசிய செயலர் சுரேந்திர மேத்தா சொல்லி இருக்கிறார். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பது, இந்தியாவில் தங்கத்தின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் சுங்க வரி போன்ற பிரச்னைகளால் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தது எனச் சொல்கிறார்கள்.
சுங்க வரி
லைவ் மிண்ட் பத்திரிகையின் கூற்றுப் படி, கடந்த வெள்ளிக்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 38,275 ரூபாய். அதே 10 கிராம் தங்கத்தின் விலை கடந்த வருடம் 31,702 ரூபாயாக இருந்தது என்கிறார்கள். சமீபத்தில் தன மத்திய அரசு தங்கத்தின் மீது 2.5 சதவிகிதம் கூடுதல் சுங்க வரி விதித்தது. அதற்கு முன் 10 சதவிகிதமாக இருந்த தங்கத்தின் மீதான சுங்க வரி இந்த 2.5 சதவிகித கூடுதல் வரியால், 12.5 சதவிகிதமாக அதிகரித்து இருப்பதும் நினைபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
குவிப்பு
தங்கம் கடந்த 2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில் ஒரு கிராமுக்கு சுமாராக 650 ரூபாய் விலை அதிகரித்து இருக்கின்ற போதிலும், நம் மக்கள் 30,000 கிலோ தங்கத்தை வாங்கிக் குவித்து இருக்கிறார்கள் எனும் போது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இந்த பண்டிகை கால வியாபாரம், இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகத்தை வெளிப்படையாக காட்டுகிறது.