வரி வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடு செய்யப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் 38வது ஜிஎஸ்டி அமைப்பு மாநாட்டில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த உள்ளதாக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
இன்று நடக்கும் கூட்டத்தில் ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கியப் பொருட்கள் மீதான வரி நிலவரம், ஜிஎஸ்டி வரி வரம்பைச் சரிபார்த்தால், ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
ஜிஎஸ்டி வரி உயர்வு
ஜியோஜிட் பைனான்சியல் சரிவீசஸ் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் வினோத் நாயர் கூறுகையில் தற்போது மத்திய அரசு சந்திக்கும் வருவாய் பற்றாக்குறையை ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் மூலம் ஈடுசெய்யும் என அனைத்து தரப்பும் எதிர்பார்க்கிறது. அதனால் இந்த ஜிஎஸ்டி கூட்டம் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் அவர் ஜிஎஸ்டி வருவாயில் ஏற்பட்டுள்ள வருவாய் சரிவின் காரணமாக ஜிஎஸ்டி வரி பலகையை மாற்றவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது என வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.
தங்கம்
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி மத்திய அரசு நகைகள் மீதான ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க அதிகளவில் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை 10 கிராமுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் அதிக வருவாய் பெற முடியும் என்பது மத்திய அரசின் திட்டமாக இருக்கலாம்.
தங்கம் மீது ஏற்கனவே 12.5 சதவீதம் இறக்குமதி வரி மற்றும் 3 சதவீத ஜிஎஸ்டி வரி இருக்கும் போது கூடுதல் வரி என்பது இத்துறை வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிடைத்த தகவல் படி தங்கம் மீது வரி உயர்த்தினால் இந்திய சந்தையில் தங்கம் விற்பனை அதிகளவில் குறையும்.
அமித் மித்ரா
இந்திய மக்களும், வர்த்தகத் துறையும் மிகவும் மோசமான காலகட்டத்தில் இருக்கும் நிலையில் புதிய வரி விதிப்பு, செய் ஆகியவற்றை விதிப்பது பிரச்சனையை வீட்டு வாசலுக்குக் கொண்டு வருவது போலாகும். தற்போது சந்தையை ஊக்குவிக்கும் வழியை மட்டும் தான் பார்க்க வேண்டும், வரியால் சுமையைக் கொடுக்கக் கூடாது என மேற்கு வங்காளம் மாநிலத்தின் நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
வரியை விதிப்பது விட, ஜிஎஸ்டி கவுன்சில் சில அடிப்படை தளர்வுகளை விதித்தால் வர்த்தகச் சந்தை மேம்படும் இதனால் தற்போது இருக்கும் பொருளாதாரச் சிக்கலும், வருவாய் பிரச்சனையும் எளிதாகத் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார் அமித் மித்ரா.
35,000 கோடி ரூபாய்
ஜிஎஸ்டி கூட்டத்தைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்பட்ட மாநில வருவாய் இழப்பை ஈடு செய்யப் பல்வேறு மாநிலங்களுக்கு 35,298 கோடி ரூபாய் நிதியை நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளது.
ஆனால் இன்னும் சில மாநிலங்கள் பல மாதங்களாகத் தங்களுக்கான பங்கீடு இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
40 சதவீத சரிவு
பட்ஜெட் அறிக்கையில் 2019-20ஆம் நிதியாண்டுக்கான ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் இலக்கில் சுமார் 40 சதவீதம் குறைவாக இருக்கிறது. இக்காலகட்டத்தில் மாதம் 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் செய்யப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.