இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வங்கித் துறையில் தனியார் வங்கிகளும் முக்கியப் பங்காற்றும் நிலையில், நாட்டின் முன்னணி தனியார் வங்கியாக விளங்கும் ஹெச்டிஎப்சி வங்கி இந்திய பங்குச்சந்தையில் 100 பில்லியன் டாலர் என்கிற மிகப்பெரிய சந்தை மதிப்பீட்டை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் இந்தச் சாதனையைப் படிக்கும் 3வது நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கி. முதல் முறையாக டாடா குழுமத்தின் மென்பொருள் வர்த்தக நிறுவனமான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் 100 பில்லியன் டாலரை தொட்டது, அதன் பின் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த இடத்தை அடைந்தது., தற்போது ஹெச்டிஎப்சி 100 பில்லியன் டாலர் என்கிற மிகப்பெரிய சந்தை மதிப்பீட்டை எட்டியுள்ளது.
வர்த்தக முடிவு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி சிறப்பாக வர்த்தகத்தைப் பெற்று 100 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்தாலும் வர்த்தக முடிவின் போது 99.5 பில்லியன் டாலர் மதிப்பில் குறைந்தது. இது மிகப்பெரிய சரிவு இல்லையென்றாலும் மீண்டும் 100 பில்லியன் டாலர் அடைவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகத்தான் தெரிகிறது.
ஹெச்டிஎப்சி வங்கியின் வர்த்தகத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்ந்து முதலீட்டை பெற்றால் அடுத்தச் சில வாரத்தில் 100 பில்லியன் டாலர் என்பதைத் தாண்டி ஒரு ஸ்திரமான நிலையை அடைய முடியும்.
3 நிறுவனங்களின் மதிப்பு
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 99.5 பில்லியன் டாலராகவும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு 140.74 பில்லியன் டாலராகவும், டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 114.60 பில்லியன் டாலராக இருக்கிறது.
அதுமட்டும் அல்லமல் டிசிஎஸ் உலகின் அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் 110வது இடத்தைப் பிடித்துள்ளது.
26வது இடம்
டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் அதிக மதிப்புடைய வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி வங்கி 100 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்ததன் மூலம் உலகளவில் 26வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்திய வங்கிகளிலேயே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த வங்கி எனப் பெயர் வாங்கியுள்ள ஹெச்டிஎப்சி வங்கியில் தற்போது முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ய முக்கியக் காரணம். இவ்வங்கி நிலையான வளர்ச்சி அடையும் என்றும் 20 சதவீத லாப வளர்ச்சி அடையும் என்று தான்.
இதனாலேயே முதலீட்டாளர்கள் மத்தியில் இவ்வங்கிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 0.30 சதவீதம் சரிந்து 1,288.45 ரூபாயை அடைந்துள்ளது.