மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் துவங்கும் இந்தக் கூட்டம் நிதியமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள், மாநிலங்களின் நிதியமைச்சர்கள், நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுராங் தாக்கூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் கலந்து கொள்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஜிஎஸ்டி கூட்டம் கூட உள்ளது.
இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் என்ன..?
வேக்சின் மீதான ஜிஎஸ்டி
கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது குறித்து மத்திய மாநில அரசுகள் மத்தியில் தீவிரமான வாக்குவாதம் செய்து வந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் மோடி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கு ஜூன் 21 முதல் இலவசமாக வேக்சின் அளிப்பதாக அறிவித்தார். இதன் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமை, வரிப் பிரச்சனை முழுமையாகத் தீர்க்கப்பட்டு உள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு 5% ஜிஎஸ்டி வரி
ஆனால் தனியார் மருத்துவமனை வாங்கும் 25 சதவீத வேக்சின்-க்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி உள்ளது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி நீக்கப்படுவது மூலம் என்ன பிரச்சனை என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார். ஆனாலும் மாநில அரசுகள் 100 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த மோசமான நிகழ்வில் வரியை நீக்கக் கோரி கருத்து முன்வைத்துள்ளது. காரணம் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்களும் இந்த வரியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் இந்தப் பிரச்சனைக்கு இக்கூட்டத்தில் தீர்வு காணப்படலாம்.
மெடிக்கல் ஆக்சிஜன் மீதான ஜிஎஸ்டி வரி
ரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் ஆக்சிஜன்-க்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது மத்திய நிதியமைச்சகம் மெடிக்கல் ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கோவிட் டெஸ்டிங் கிட் ஆகியவற்றின் மீதான 12 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைக்கத் தயாராகி வருகிறது. ஆனால் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மாநிலங்களின் கோரிக்கை.
மருத்துவ உபகரணங்கள்
மருத்துவமனை மற்றும் ஆம்புலென்ஸ்-ல் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியைக் குறைக்கவும் கோரிக்கை வந்துள்ளது. இதற்கான முடிவும் இன்று எடுக்கப்பட உள்ளது.
இதேவேளையில் மத்திய அரசு தற்போது அளிக்கப்படும் தளர்வுகள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சிறு வர்த்தகங்களுக்குத் தளர்வு
சிறு வர்த்தகங்கள் காலாண்டு வாரியாக வரியைச் செலுத்த தற்போது சலுகை வழங்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு மாதம் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கு பின்பும் காலாண்டு வாரியாக வரி செலுத்துவதற்கான திட்ட மாற்றங்களை இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.