நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று துவங்கிய 45வது ஜிஎஸ்டி கூட்டம், லக்னோவில் நடந்தது. 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது.
கோவிட் மருந்துகள்
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருந்துகளுக்கு ஏற்கனவே வரி தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தளர்வுகள் செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனால் இந்த வரி தளர்வு காலத்தை டிசம்பர் 30 வரையில் நீட்டிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதோடு Amphotericin B, Tocilizumab ஆகிய இரு மருந்துகளுக்கு டிசம்பர் 31 வரையில் 0 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தளர்வு அளிக்கப்பட்ட வரி அனைத்தும் மருந்து பொருட்களுக்கு மட்டுமே, மருத்துவ உபகரணங்களுக்கு இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முக்கியமான இரு மருந்துகள்
Muscular atrophy என்னும் மோசமான நோய்க்கான மருந்தின் விலை 16 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இதனால் பல பாதிக்கப்படும் காரணத்தால் தனி நபர் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் இந்த நோய்க்கான மருந்தான Zolgensma மற்றும் Viltepso-க்கு முழுமையாக ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவை மத்திய சுகாதாரத் துறை பரிந்துரையின் படி ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விமானங்கள் குத்தகை
இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து குத்தகைக்கு வாங்கும் விமானங்களுக்கான IGST வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெரும் பகுதி வரி தொகை சேமிக்க முடியும்.
இந்த அறிவிப்பு விமானச் சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக உள்ளது.
ரயில்வே
இந்திய ரயில்வே துறையில் லோகோமோட்டீவ் பிரிவுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பயோ டீசல்
எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு டீசலில் கலக்க உதவும் பயோ டீசல் மீதான வரியை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல்
கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரிலும், செய்தி நிறுவனங்களில் அதிகளவில் விவாதம் செய்யப்பட்ட காரணத்தால் மட்டுமே இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதம் செய்யச் சேர்க்கப்பட்டது.
இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ள காரணத்தாலும், பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதிக்க இது சரியான காலம் இல்லை என்பதை உணர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்கள்
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்களுக்கான (fortified rice kernels) ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இரு அமைச்சர் குழுக்கள்
ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு அடுத்த சில வாரத்தில் இரு அமைச்சர் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது
1. இதில் ஒரு அமைச்சர் குழு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து 2 மாதத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
2. இரண்டாவது அமைச்சர் குழு ஈ-வே பில், பாஸ்ட் டேக், டெக்னாலஜி,
இணக்கம், கலவை திட்டங்களில் இருக்கும் பிரச்சனைகளில் ஆய்வு செய்து 2 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
இதை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளை விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது என மத்திய நிதியமைச்சரும், ஜிஎஸ்டி அமைப்பின் தலைவருமான நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதிய வரி
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எவ்விதமான புதிய வரியும் விதிக்கப்படவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
முக்கிய பொருட்களுக்கான வரி
1. காலாணிகளுக்கான வரி விதிப்பு (inverted duty) முறைகளை மாற்றிக்கொள்ள ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது
2. போனா-வுக்கு 18 சதவீத வரி
3. renewable துறை சார்ந்த கருவிகள் மீதான வரியை 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி மார்ச் 2026 வரையில் தொடரும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஏற்றுமதி
ஜிஎஸ்டி தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறுகளில் காரணமாக ஏற்றுமதியாளர்கள் இன்புட் டாக்ஸ் கிரெடிட் ரீபண்ட் பெற முடியாத காரணத்தால் கப்பல் மற்றும் விமானம் மூலம் சரக்குகளை ஏற்றுமதி செய்யப்படுவோருக்குச் செப்டம்பர் 30 வரையில் ஜிஎஸ்டி வரி முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சி திட்டங்கள்
மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவி உடன் அளிக்கும் பயிற்சி திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறினார்.