மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45வது ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் இன்று துவங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணத்தால் வீடியோ கான்பிரென்சிங் முறையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது தற்போது லாக்டவுன் அறிவிப்புக்குப் பின்பு முதல் முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடை பெறுகிறது.
இக்கூட்டத்தில் 45க்கும் அதிகமான விஷயங்கள் பேசப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இக்கூட்டத்தில் மிகவும் முக்கியமான விவாதிக்கப்படும் விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
பெட்ரோலியம் பொருட்கள்
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் அதிகமான பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி கட்டமைப்பிற்குள் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட உள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா எதிர்ப்பு
ஆனால் இந்தத் திட்டத்திற்குக் கேரளா மற்றும் மகாராஷ்டிரா எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு குறித்து எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.
வரி வருவாய் பாதிப்பு
பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் மத்திய அரசுக்கும் சரி, மாநில அரசுக்கும் சரி அதிகளவிலான வரி வருமானம் பாதிப்பு ஏற்படும் என்பதால் மாநில அரசுகளும் தயங்கி வருகிறது. இதை மத்திய மாநில அரசுக்கான ஜிஎஸ்டி வரிப் பங்கீட்டை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் ஈடுகட்ட முடியும், ஆனால் இதை மத்திய அரசு கட்டாயம் ஏற்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா மருந்து
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் முக்கியமான மருந்து மற்றும் உபகரணங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த வரி தளர்வுகளைத் தொடர்வது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. முக்கியமாக 11 கோவிட் மருந்துகள் மீதான வரித் தளர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
ஆதார் அங்கீகாரம்
இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டு உள்ள 80 லட்சம் நிறுவனங்களுக்குக் கட்டாய ஆதார் அங்கீகாரத்தை எப்படி அளிப்பது என்பதற்கான திட்டத்தையும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், ஆட்டோமொபைல் துறைக்குமான PLI திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ள வேளையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி அளவீட்டை நிர்ணயம் செய்யும் முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி நிலுவை தொகை
இதைத் தாண்டி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை மற்றும் கணக்கீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வு ஆகியவற்றை இந்த 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இதோடு சிக்கிம் மாநிலங்களுக்கு மத்தியிலான 1 சதவீத மருத்துவ உபகரணங்கள் சப்ளைக்கு 1 சதவீத செஸ் வரியை அடுத்த 2 வருடத்திற்கு விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.
சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி
உணவு டெலிவரி நிறுவனங்கள் மீது புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்கத் திட்டமிட்டுப்பட்டு அதற்காக ஆலோசனை செய்யப்பட உள்ளது. சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செயலிகளை ரெஸ்டாரண்ட் அதாவது உணவகங்களாகக் கருதி, இந்நிறுவனம் செய்யும் ஒவ்வொரு டெலிவரிக்கும் (சப்ளை) 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு..
இதைத் தவிர 40க்கும் அதிகமான விஷயங்கள் குறித்துப் பேச ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் திட்டமாக உள்ளது.
அப்படிப் பெட்ரோல்-ஐ ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் 75 ரூபாய் தான்.