உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டி வங்கி சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியச் சந்தையில் இருக்கும் தனது கிரெடிட் கார்ட் வர்த்தகம் உட்பட அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளது சிட்டி பேங்க் நிர்வாகம்.
சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை இந்தியாவில் சிட்டி பேங்க் வைத்திருக்கும் நிலையில், இதைக் கைப்பற்ற இந்திய வங்கிகள் மத்தியில் கடுமையாகப் போட்டி நிலவுகிறது.
வங்கித்துறையில் போட்டி
இந்திய வங்கித்துறையில் தற்போது போட்டி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில் வங்கிகள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது.
சிட்டி வங்கி
இந்நிலையில் சிட்டி வங்கியின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ரீடைல் வர்த்தகத்தை அதாவது கிரெடிட் கார்டு, அடமான கடன், வெல்த் மேனேஜ்மென்ட், டெப்பாசிட் எனப் பல விதமான வர்த்தகங்கள் அடங்கியுள்ளது.
5 வங்கிகள் போட்டி
இந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற தற்போது 4 உள்நாட்டு வங்கிகள் மற்றும் ஒரு வெளிநாட்டு வங்கியும் போட்டிப்போட்டு வருகிறது. ஆனால் 3 வங்கிகள் மட்டுமே சிட்டி பேங்க் 2 பில்லியன் டாலர் வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் முன்னோடியாக உள்ளது.
3 வங்கிகள் முன்னிலை
ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, சிங்கப்பூர் நாட்டின் டிபிஎஸ் வங்கி ஆகியவை தற்போது போட்டிப்போட்டு வருகிறது. இதில் ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூர் நாட்டின் டிபிஎஸ் வங்கி ஆகியவை இப்போட்டியில் முன்னோடியாக உள்ளது.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள்
சிட்டி பேங்க் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 3ல் ஒரு பங்கு ரீடைல் வர்த்தகத்தில் இருந்து கிடைக்கிறது. சுமார் 2.8 மில்லியன் ரீடைல் வாடிக்கையாளர்கள், 1.2 வங்கி கணக்குகள், 2.6 மில்லியன் கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்கள் வைத்துள்ளது.
35 வங்கி கிளைகள்
இதுபோக நாடு முழுவதும் 35 வங்கி கிளைகள், கிரெடிட் கார்ட் வர்த்தகத்தில் இந்தியாவில் 6வது பெரிய நிறுவனமாகவும், 4 சதவீத வர்த்தகச் சந்தையும் கொண்டு உள்ளது. ஆனால் சிட்டி பேங் கிரெடிட் வாடிக்கையாளர்கள் இந்திய சந்தையின் சராசரி கிரெடிட் கார்ட் செலவிடும் அளவை விடவும் 15 முதல் 25 சதவீதம் அதிகமாகச் செலவு செய்கின்றனர்.
ரீடைல் வர்த்தகத்தை விற்பனை
சிட்டி குரூப் தனது ரீடைல் வர்த்தகத்தை விற்பனை செய்த பின்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகி இனி வெல்த் மேனேஜ்மென்ட் சேவையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வாயிலாக 13 நாடுகளில் இருக்கும் சர்வதேச நுகர்வோர் சேவை பிரிவில் இருந்து விலக நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
13 நாடுகளில் இருந்து வெளியேற்றம்
இதன் மூலம் சீனா, இந்தியா உட்பட 13 நாடுகளில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகும் சிட்டிகுரூப் இனி சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமே இப்பிரிவில் சேவை அளிக்க உள்ளது.
சீஇஓ முடிவு
சிட்டி குரூப் நியமித்த புதிய சீஇஓவான ஜேன் ப்ராசர் 13 நாடுகளில் ரீடைல் வர்த்தகத்தில் இருந்து வெளியேறுவது பற்றி கூறுகையில், ரீடைல் வங்கி சேவையில் சந்தையில் இருக்கும் பிற வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடும் அளவிற்கான வடிவம் இல்லாத காரணத்தால் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் வளர்ச்சியை இரட்டிப்பு செய்யும் வகையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வங்கிகள் வெளியேற்றம்
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு வங்கிகளுக்கு வர்த்தகம் விரிவாக்கம் செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஆனால் கடுமையான போட்டி நிலவும் காரணத்தால் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் ஸ்டாண்டர்டு சார்ட்டட், டாய்ச் வங்கி, HSBC வங்கிகளைத் தொடர்ந்து தற்போது சிட்டி குரூப் வங்கியும் தனது வர்த்தகத்தை மூடிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறது.