இந்திய பங்குச்சந்தையில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடத்திலும் முதலீடு செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் நவம்பர் 2021 முதல் இன்று வரையில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடத்திலும் முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்திய வரலாற்றில் இதுவரை பார்த்திடாத வகையில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது.
கடந்த 9 மாதமாக வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.
20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன்
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா-வின் மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்திய பின்பு மும்பை பங்குச்சந்தை அதன் மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றாலும் 20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது, சென்செக்ஸ் 20 சதவீதம் சரிந்தால் 49,373 புள்ளிகளை எட்டும், நிஃப்டி 4,883 புள்ளிகளை எட்டும்.
அன்னிய செலாவணி
வட்டி விகித உயர்வாலும், பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு உள்ள
இந்தியப் பங்குச்சந்தை, வர்த்தகச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் பாதுகாப்பான பத்திர முதலீட்டு சந்தைக்குக் கொண்டு செல்ல அடுத்தடுத்து வெளியேறத் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் துவங்கியுள்ளனர். இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்.
ஜூன் மாதம் 17 வரை
மே மாதம் மட்டும் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 45276 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். ஜூன் மாதம் 17ஆம் தேதி வரையில் மட்டும் இதுவரை 28,445 கோடி ரூபாய் மத்தியிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது.
2.022 லட்சம் கோடி ரூபாய் மாயம்
இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 2.022 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு இந்திய சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் அன்னிய செலாவணி இருப்பு 600 பில்லியன் டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது.
ரூ.15.74 லட்சம் கோடி இழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை முதல் முதலீட்டாளர்கள் மொத்த சந்தை மதிப்பு சரிந்து வரும் நிலையில் வியாழக்கிழமை வீழ்ச்சி வரையில் ரூ.15.74 லட்சம் கோடியை பிஎஸ்ஈ முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதன் வாயிலாகச் சந்தை மூலதனம் ரூ.239.5 லட்சம் கோடியாகக் குறைந்தது - இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூ.240 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்தது இதுவே முதல்முறை.
8 மாத சரிவு
இதற்கிடையில் மும்பை பங்குச்சந்தையின் சமீபத்திய சரிவில் 8 முக்கியமான பங்குகள் 6 சதவீதம் முதல் 41 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த 8 நிறுவன பங்குகள் மட்டும் சுமார் 12.76 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான பாதிப்பை கொடுத்துள்ளது.
8 முக்கிய நிறுவன பங்குகள்
இதன் அடிப்படையில் அக்டோபர் 19, 2021 முதல் நிஃப்டி 50ல் அதிகளவு இழப்பினை கொடுத்துள்ள 8 முக்கிய நிறுவன பங்குகள்
ஹெச்டிஎப்சி வங்கி - 2,23,845 கோடி ரூபாய் இழப்பு
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் - 1,94,655 கோடி ரூபாய் இழப்பு
இன்போசிஸ் - 1,78,145 கோடி ரூபாய் இழப்பு
விப்ரோ - 1,58,469 கோடி ரூபாய் இழப்பு
பஜாஜ் பைனான்ஸ் - 1,46,745 கோடி ரூபாய் இழப்பு
ஹெச்டிஎப்சி - 1,36,935 கோடி ரூபாய் இழப்பு
பஜாஜ் பின்செர்வ் லிமிடெட் - ரூ.1,20,619 கோடி ரூபாய் இழப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ரூ.-1,16,572 கோடி ரூபாய் இழப்பு
சென்செக்ஸ்
அடுத்த நாணய கொள்கை கூட்டம் வரையில் சர்வதேச சந்தை பாதிப்புகள் வாயிலாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.