ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு மற்றும் அரசு அமைப்புகள் பல மாற்றங்களை அறிவித்து வரும் நிலையில், செப் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு அதிகப்படியான விலையில் பெட்ரோல், டீசல்-ஐ விற்பனை செய்யும் காரணத்தால் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் தினசரி மாற்றங்கள் செய்யப்படாமல் அவ்வப்போது குறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்த காரணத்தால் மத்திய அரசு குறைக்கப்படும் விலை அளவீடுகள் பெரிதாக லாபத்தை அளிக்கவில்லை.
இதேபோல் தங்கம் விலையும் தினசரி சர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலும், சந்தையில் டிமாண்ட் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாறி வருகிறது. இதை நீங்கள் தினசரி இந்த இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் நடக்க உள்ள முக்கிய மாற்றங்கள், கடைசி நாள் ஆகியவற்றை இப்போது பார்ப்போம்.
சமையல் சிலிண்டர் விலை
இந்தியாவில் மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக எரிவாயு இணைப்பைக் கொடுத்து வருகிறது. இதேவேளையில் மறுபுறம் சிலிண்டர் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோலியம் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஜூலை மாதம் 25.50 ரூபாய் அதிகரித்த நிலையில், ஆகஸ்ட் மாதமும் 25 ரூபாய் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதமும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் ஒரு சமையில் எரிவாயு சிலிண்சர் விலை 875.50 ரூபாயில் இருந்து 900.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் சமையில் சிலிண்டர் விலை சுமார் 190 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
ஆதார் - பிஎப் கணக்கு இணைப்பு
செப்டம்பர் 1 முதல் ஆதார் மற்றும் பிஎப் கணக்கின் UAN எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், ஆதார் - UAN இணைக்கப்படாத கணக்கிற்கு நிறுவனங்கள் தங்கள் பங்கு பிஎப் பணத்தைக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட மாட்டாது. இதுமட்டும் அல்லாமல் ஆதார் - UAN இணைக்கப்படாத கணக்கிற்கு எவ்விதமான சேவைகளும் அளிக்கப்படாது என்றும் ஈபிஎப்ஓ அறிவித்துள்ளது.
ஆதார் - பான் இணைப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இணைக்கப்படாத பட்சத்தில் சில பணப் பரிமாற்ற தடைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. குறிப்பாக ஒரு நாளுக்கு 50000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப் பான் கட்டாயப்படுத்தியுள்ளது.
GSTR-1 ரிட்டன்ஸ் கட்டுப்பாடுகள்
சரக்கு மற்றும் தேவை வரிப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி மத்திய ஜிஎஸ்டி வரி விதி 59(6) செப்டம்பர் 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் GSTR-3B தாக்கல் செய்யாதவர்கள் GSTR-1 தாக்கல் செய்ய முடியாது. இந்தப் புதிய கட்டுப்பாடு செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய காசோலை அனுமதி விதிமுறைகள்
ரிசர்வ் வங்கி காசோலை பணப் பரிமாற்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்தது.
இப்புதிய விதிமுறைகள் படி அதிகத் தொகை கொண்ட காசோலைகள் பரிமாற்றம் செய்யும் முன்னர், வங்கிகள் காசோலை கொடுத்தவரின் அனுமதியைத் தனியாகப் பெற வேண்டும், இல்லையெனில் காசோலை கொடுத்தவர் வங்கிகளுக்குத் தத்தம் பரிமாற்றம் குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இதன் மூலம் காசோலை கொடுத்தவரை அடையாளம் காணுதல் மற்றும் மோசடிகளைத் தடுக்க முடியும்.
ஜனவரி 1ஆம் தேதியே இந்த விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் இந்திய வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தக் கட்டமைப்புகளை உருவாகுவதற்குக் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.
உதாரணமாக ஆக்சிஸ் வங்கி இப்புதிய விதிமுறைகளைச் செப்டம்பர் 1 முதல் அமலாக்கம் செய்துள்ளது.
கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்கள்
செப்டம்பர் 1 முதல் புதிய கார்களை வாங்குவோர் கூடுதலான பணத்தை இன்சூரன்ஸ் திட்டத்திற்காகச் செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பின்பு செப்டம்பர் 1-க்கு பின்பு கார்களுக்கு own damage coverage அதாவது பம்பர் டூ பம்பர் இண்சூரன்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இதன் மூலம் தற்போது புதிய கார்களுக்கான டவுன் பேமெண்ட் அளவு 12,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
மாருதி சுசூகி கார் விலை
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் செப்டம்பர் 1 முதல் தனது அனைத்து கார்களின் விலையும் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் மாருதி கார் வாங்க திட்டமிடும் அனைவரும் கூடுதலான தொகையைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.