டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஒன்று.
இந்த நிறுவனத்தை மூடப் போகிறார்கள், தனியார் நிறுவனத்துக்கு விற்கப் போகிறார்கள் என பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டு இருந்தது.
ஆனால் இப்போது தான் கடைசியாக அரசு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, நிறுவனத்தை மீண்டும் களம் இறக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முதலீடுகள்
அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. ஒரு பக்கம் வருமானத்தை அதிகரிக்க 4ஜி சேவையைத் துவங்குவது, தற்போது இருக்கும் இயந்திரங்களை நவீனமயப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். மறு பக்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் வேலை பார்த்து வருகிறார்கள்.
விருப்ப ஓய்வு திட்டம்
தற்போதைய கணக்குப் படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமாராக 1.5 லட்சம் பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் சுமார் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வு தேர்வு செய்யும் விதத்தில் ஒரு விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த திட்டம் வரும் ஜனவரி 31, 2020-ல் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.
எத்தனை பேர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த 1.5 லட்சம் பேரில் சுமாராக 77,000 பேர் இந்த திட்டத்தின் வழியாக விருப்ப ஓய்வு பெறுவார்கள் என பிஎஸ்என்எல் நிர்வாகமே இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான கணக்குப் படி சுமார் 75,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் இணைந்து இருக்கிறார்களாம்.
செலவு குறையும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமாராக 70 - 80 ஆயிரம் ஊழியர்கள் இப்படி விருப்ப ஓய்வு பெறுவதில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் எனச் சொல்கிறார்கள். இந்த புதிய விருப்ப ஓய்வு திட்டம் வரும் டிசம்பர் 03, 2019 வரை இருக்குமாம். அதற்குள் வி ஆர் எஸ் வாங்க விரும்புபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
யாரெல்லாம் வாங்கலாம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வி ஆர் எஸ் திட்டத்தில், 50 வயதைக் கடந்த அனைத்து நிரந்தர ஊழியர்களும் விருப்ப ஓய்வு பெறலாமாம். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து மற்ற நிறுவனத்துக்கு தற்காலிகமாகச் சென்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் அடக்கம். இதே போல எம் டி என் எல் நிறுவனமும் ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணைப்பு
சமீபத்தில் தான் மத்திய கேபினெட் அமைச்சரவை, எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை இணைக்க அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு, புதிய 4ஜி சேவை உடன் திடமாக பிஎஸ்என்எல் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் இந்தியாவில் ஜியோ மட்டுமே டெலிகாம் நிறுவனமாக இருக்கும் போல் தெரிகிறது. பிஎஸ்என்எல் வெர்சன் 2.0 தரமாக தயார் ஆகட்டும்.