டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனத்தை மூடப் போகிறார்கள், தனியார் நிறுவனத்துக்கு விற்கப் போகிறார்கள் என பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் இதற்கு எல்லாம் பதில் கொடுக்கும் விதத்தில், அரசு ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, நிறுவனத்தை மீண்டும் போட்டிக்கு தயார் செய்து களம் இறக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
அதோடு ஊழியர்களுக்கு ஒரு நல்ல விருப்பு ஓய்வுத் திட்டத்தைக் கொண்டு வரச் சொன்னது மத்திய அரசு. சில வாரங்களுக்கு முன் தான், இந்த இரண்டு டெலிகாம் துறை நிறுவனங்களும் தனித்தனியாக இரண்டு விருப்ப ஓய்வு திட்டங்களை அறிவித்தது.
பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் கணக்குப் படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமாராக 1.5 லட்சம் பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதில் சுமார் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வு தேர்வு செய்யும் விதத்தில் ஒரு விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த திட்டம் வரும் ஜனவரி 31, 2020-ல் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. அந்த திட்டத்தின் பெயர் 'BSNL Voluntary Retirement Scheme - 2019'. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த 1.5 லட்சம் பேரில் சுமாராக 70 - 80 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் வழியாக விருப்ப ஓய்வு பெற்றால் சுமார் 7,000 கோடி ரூபாய் செலவு குறையும் எனக் கணக்கு போட்டு இருக்கிறது பிஎஸ்என்எல்.
இதே போல எம் டி என் எல் நிறுவனமும் ஒரு திட்டத்தை விருப்ப ஓய்வு திட்டத்தை வடிவமைத்தது. ஆனால் இப்போது பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் சேர்த்து சுமாராக 92,000 பேருக்கு மேல் விருப்பு ஓய்வு பெற சம்மதித்து இருக்கிறார்களாம்.
இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு மத்திய அரசு சுமார் 17,160 கோடி ரூபாயை வழங்க இருக்கிறது. அதோடு மற்ற ஓய்வு கால செட்டில்மெண்ட்களளுக்கு 12,768 கோடி ரூபாயைக் கொடுக்க இருக்கிறது. விரைவில் இரண்டு அரசு நிறுவனங்களும் இணைய இருப்பதும் நினைவு கூறத்தக்கது.