தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியால் உலகம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் ஐ.டி. துறையின் மீது இளைஞர்களுக்கு பெரிய அளவில் ஈர்ப்பு உள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்த்தால் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், வாழ்க்கையும் செட்டிலாகி விடும் என்ற எண்ணம் பலரும் நினைக்கின்றனர். மேலும் நிறுவனங்களும் திறமையான பணியாளர்களுக்கு அள்ளி கொடுக்கின்றன. இதனால் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பது பெருமை என்ற நிலையும் உருவாகி விட்டது. ஆனால் நேரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

அசுர வளர்ச்சி வேகத்தில் வளர்ந்து வந்த ஐ.டி. துறை தற்போது சர்வதேச பொருளாதார மந்தநிலை சூழலால் சிறிது பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனையடுத்து கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் உள்நாட்டு பைஜூஸ் வரை பல ஐ.டி. நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்தன. இதனால் பல லட்சம் ஊழியர்கள் திடீரென வேலையை இழந்தனர். இதனால் அவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது.
வேலை பறிபோனதால் பல முன்னாள் ஐ.டி. பணியாளர்கள் பிழைப்புக்காக வேறு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் முன்னாள் பணியாளர் ஒருவர் வாழ்வாதாரத்துக்காக பைக் டாக்சி ஓட்டுகிறார். பெங்களூருவை சேர்ந்த ராகவ் துவா என்பவர் ஒரு இடத்துக்கு செல்வதற்காக உபேர் நிறுவனத்தின் பைக் டாக்ஸி சேவையான உபேர் மோட்டோவில் முன்பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அழைத்து செல்வதற்காக வந்த பைக் டாக்ஸில் ராகவ் துவா அமர்ந்து சென்றார்.

பயணத்தின் போது, பைக் டாக்ஸி டிரைவரிடம் ராகவ் துவா பேச்சு கொடுத்ததில், அந்த பைக் டிரைவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதை தெரிந்து ஆச்சரியம் அடைந்தார். இந்த தகவலை ராகவ் துவா தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். ராகவ் துவா எக்ஸில், எனது உபேர் மோட்டோ டிரைவர் முன்னாள் கூகுள் பணியாளர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு வந்தார். நகரத்தில் வாய்ப்பு தேடுவதற்காக இதை செய்கிறார் என்று பதிவு செய்து இருந்தார்.


Click it and Unblock the Notifications