மும்பை: அபுதாபியின் முபதாலா முதலீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 6,247.5 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
முபதாலாவின் இந்த முதலீட்டின் மூலம், முபதாலா வசம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் 1.4 சதவீத பங்குகள் வரும்.
முபதாலா நிறுவனம் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்மில் 9,093.60 கோடி ரூபாயை முதலீடு செய்து, 1.85 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் செய்யப்படும் ஐந்தாவது முதலீடாகும். அதுவும் மூன்று வாரங்களுக்குள் இந்த முதலீடு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ரிலையன்ஸ் ரீடெயில் வணிகத்தில் முதலீடு செய்யும் பெரும்பாலானவர்கள், ரிலையன்ஸ் ஜியோவிலும் முதலீடு செய்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் மதிப்பீடு 4.2 டிரில்லியன் ரூபாயாக உள்ளது கவலைக்குரிய அறிகுறியாகும் என்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு பங்குகளின் விற்பனை தொடர்ந்தால், நிறுவனத்தின் மதிப்பீடு குறைந்தபட்சம் 4.5 டிரில்லியனை எட்டும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் இன்னும் சிறு முதலீடுகளை அம்பானி ஈர்க்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, முபதாலா ஒரு மதிப்புமிக்க முதலீட்டாளர் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்து வந்தாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் சமீபத்தில் தான் ஜியோமார்ட் என்ற பெயரில் களமிறங்கியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். சில்லறை வர்த்தகத்தில் நாடு முழுவதும் 12,0000 மேற்பட்ட சில்லறை கடைகள் ரிலையன்ஸூக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக இந்தியா நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் விரிவுபடுத்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் அமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம், சில்வர் லேக் நிறுவனம், கேகேஆர் நிறுவனம், தற்போது முபதாலா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்பந்தம் செயப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜியோவில் அமேசான் முதல் கூகுள் வரை முதலீடு செய்திருந்த நிலையில், இந்த முறையும் இன்னும் யாரெல்லாம் முதலீடு செய்ய போகிறார்களோ தெரியவில்லை.. எது எப்படியோங்க இந்தியாவுக்கு நல்லது நடந்தால் சரிதானே.