தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. 1990களில் திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர். புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுகன்யா விஜயகாந்த், கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சின்ன கவுண்டர், மகாநதி, இந்தியன், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல் என இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள். இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்தவர். சினிமா மட்டுமில்லாமல் சீரியலிலும் கால் பதித்து வெற்றி கரமாக வலம் வந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்தார். தற்போது இவர் பெரிய அளவில் படங்களில் நடிப்பது இல்லை. வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். கலைமாமணி விருது பெற்றவர் சிறந்த பரத நாட்டிய கலைஞரும் கூட. பல படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், 1996ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் குற்றவாளி வீரப்பனிடம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த பேட்டியில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகனுக்கு சுகன்யாவுக்கு தொடர்பு இருந்ததாகவும் இதில் அரசியல் ஆதாயம் இருந்ததாகவும் வீரப்பன் கூறியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு என தொடர்ந்து மறுத்து வந்த சுகன்யா இந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த பேட்டியால் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், தொழில் வாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த அவர், வீரப்பன் தன்னை பற்றி அவதூறாக பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த சன் தொலைக்காட்சி நிறுவனம், பேட்டியை எடுத்த நக்கீரன் கோபால், பேட்டி கொடுத்த வீரப்பன் ஆகியோருக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. பல நீதிமன்றங்களுக்கு சென்று இறுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நடிகை சுகன்யாவுக்கு சன் டிவி குழுமம் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த பேட்டியில் இருந்த தகவல்களை எடிட் செய்து ஒளிபரப்ப வாய்ப்பு இருந்தும் சன் டிவி நிறுவனம் அதனை செய்ய தவறியது என கூறி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications

