மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்ட காரணத்தால் இந்தியப் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தைப் பதிவு செய்தது.
இதனாலேயே தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து, ஆனால் பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டுச் சந்தைக்குச் சாதகமாக மாறிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்க முதலீட்டுச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் பங்குச்சந்தைக்கு வர துவங்கியுள்ளது, இதனால் தங்கம் விலையும் இன்று சரிந்துள்ளது.
அதானி குழும பங்குகள்
இன்று அதானி குழும பங்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையிலும் சென்செக்ஸ் 909 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் ஆதிக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
சரிவில் இருந்து மீண்டது
ஆனால் இன்று காலையில் மோசமான சரிவுக்குப் பின்பு அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் வர்த்தகம் முடியும் போது சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு 1.25 சதவீதம் உயர்வுடன் உள்ளது.
இதேபோல் அதானி போர்ட்ஸ் 7.98 சதவீதம் உயர்ந்தும், ஏசிசி லிமிடெட் பங்குகள் 4.39 சதவீதம் உயர்ந்தும், அம்புஜா சிமெண்ட்ஸ் 6.03 சதவீதம் உயர்ந்தும் உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் காலையில் 30 சதவீதம் வரையில் சரிந்து குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்று பங்குச்சந்தை மீதான முதலீடு அளவுகள் அதிகரிப்புக்கும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுக்கு முக்கியமான காரணம் மத்திய வங்கிகளின் வட்டி உயர்வு காலம் வந்துவிட்ட வேளையில் உலகளவில் பணவீக்கம் குறைந்தது மூலம் புதிய வட்டி விகித உயர்வுகள் இருக்காது என்பது தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்த நம்பிக்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதானி குழும நிறுவனப் பங்குகளை விடுத்துப் பிற நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 909.64 புள்ளிகள் உயர்ந்து 60,841.88 புள்ளிகளை எட்டியுள்ளது.
டைட்டன்
இதேபோல் நிஃப்டி குறியீடு 243.65 புள்ளிகள் உயர்ந்து 17,854.05 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டைட்டன் பங்குகள் அதிகப்படியாக 6.87 சதவீதம் வரையில் உயர்ந்து 2463.20 புள்ளிகளை எட்டியுள்ளது.
முக்கிய நிறுவனம்
இதைத் தொடர்ந்து பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, என்டிபிசி, சன் பார்மா ஆகியவை அதிகப்படியான உயர்வை பதிவு செய்துள்ளது. இதேவேளையில் டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, கோட்டாக் வங்கி ஆகியவை சரிவை பதிவு செய்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை
இந்த நிலையில் முதலீட்டாளர் முதலீட்டு மதிப்பைப் பாதுகாக்கும் விதமாகத் தேசிய பங்குச்சந்தை அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த குறுகிய காலக் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் சேர்த்துள்ளது.
Citigroup, கிரெடிட் சூசி அறிவிப்பு
அமெரிக்காவின் Citigroup நிறுவனத்தின் வெல்த் பிரிவும், சுவிஸ் நிதி நிறுவனமான கிரெடிட் சூசி நிறுவனமும் மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானி-யின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்கு No Lending Value என்ர தர குறியீட்டையும் அளித்துள்ளது.
Dow Jones குறியீடு
இதைத் தொடர்ந்து கௌதம் அதானி-யின் அதானி குழுமத்தின் முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், பிப்ரவரி 7, 2023 அன்று வர்த்தகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, Dow Jones Sustainability குறியீட்டில் இருந்து நீக்கப்படும் என்று S&P Dow Jones Indices வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழும பங்குகள்
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 1.25 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 7.98 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 10.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 10.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 4.39 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.03 சதவீதம் உயர்வு
NDTV - 4.98 சதவீதம் சரிவு