இந்திய பொருளாதாரத்தின் செப்டம்பர் காலாண்டின் வளர்ச்சி தரவுகள் இன்று வெளியாகும் நிலையில் சந்தையின் மொத்த கவனமும் அரசின் தரவுகள் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கியின் கணிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக இந்திய மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டாளர்களின் கவனம் தற்போது விவசாயத் துறையின் மீது திரும்பியுள்ளது. என்ன காரணம் தெரியுமா..?
முதல் காலாண்டு
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பாதிப்பால் நாட்டின் உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகியவை பெரிய அளவில் பாதிப்பு அடைந்த நிலையில் விவசாயத் துறையின் சிறப்பான வளர்ச்சியை அடைந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் உயர்ந்தது.
முதல் காலாண்டில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை விவசாயம் மட்டும் தான்.
அரசு அறிவிப்புகள்
இந்நிலையில் சிறப்பான பருவமழை, நடப்பு நிதியாண்டுக்குக் கூடுதலாக 65,000 கோடி ரூபாய் அளவிலான மானியம், 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் விவசாயத் துறையைச் சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் விவசாய துறை பெரிய அளவிலான ஆதிக்கம் செய்கிறது.
விவசாய உற்பத்தி
கொரோனா பாதிப்பும், கட்டுப்பாடுகளும் உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டமான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறை உற்பத்தி 3.4 சதவீதம் வளர்ச்சியில் இருந்தது. எனவே செப்டம்பர் காலாண்டில் லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டு உற்பத்தி மற்றும் சேவைத் துறை வர்த்தகம் பெறத் துவங்கிய நிலையில் விவசாயத் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
முதலீட்டாளர்கள்
இதன் வாயிலாக இன்று முதலீட்டாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் விவசாயத் துறையின் வளர்ச்சி அளவீடுகளைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஊரக வளர்ச்சி
விவசாயத் துறைக்குத் தற்போது மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதன் ஆதிக்கத்தாலும் ஊரகப் பகுதிகளில் வர்த்தகம், மக்களின் வருமானம், மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வைத்துப் பல நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி துறை
ஜூன் காலாண்டில் லாக்டவுன் காரணமாக நாட்டின் உற்பத்தித் துறை 35.7 சதவீதம் சரிந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் 5.9 சதவீத அளவிலான சரிவை மட்டுமே சரிந்திருந்தது.
இது இக்குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியாகும்.