இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மகாராஜாவாகக் கருதப்படும் ஏர் இந்தியா நிறுவனம் அதீத கடன் காரணமாக மோசமான வர்த்தக நிலையில் சிக்கித்தவித்து வருகிறது. இந்நிறுவனத்தை விற்பனை செய்யப் பல முறை ஏல விண்ணப்பங்கள் கோரப்பட்டும் யாரும் முன்வரவில்லை, இந்நிலையில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கத் தனது கூட்டணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் 90,000 கோடி ரூபாய்க் கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சில ஒன்றிணைந்துள்ளனர்.
ஏர்இந்தியா ஊழியர்கள்
ஒரு காலத்தில் இந்திய விமானப் போக்குவரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏர் இந்தியா வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், வர்த்தகச் சரிவின் காரணமாகவும் தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஏர் இந்தியாவின் ஊழியர்களில் ஒரு குழு தனியார் முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சிகளைச் செய்து வருகிறது.
கைப்பற்றும் திட்டம்
ஏர் இந்தியாவின் ஊழியர்கள் குழு ஒன்று தலா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் படி ஊழியர்கள் 51 சதவீத பங்குகளையும், தனியார் முதலீட்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளை நிர்வாகம் செய்யும்.
விருப்ப விண்ணப்பம்
தனியார் முதலீட்டு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் குழுவின் முடிவின் படி, முதற்கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்ற முதலில் விருப்ப விண்ணப்பம் கொடுக்கும், முதற்கட்டத்தை வெற்றி அடைந்த பின்பு ஊழியர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தைத் திரட்டலாம் என முடிவு செய்துள்ளது.
1 லட்சம் ரூபாய்
மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஊழியர்கள் குழுவில் இருக்கும் அனைவரிடமும் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிறுவனத்தின் அனைத்து ஏர் இந்தியா ஊழியர்கள் (அ) முதலீட்டாளர்களுக்கும் சமமான உரிமை இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டாடா முயற்சி
இதேவேளையில் டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தாரா நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விஸ்தாரா
இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணி விஸ்தாரா நிறுவனத்தின் வாயிலாக ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.