ஏர் இந்தியாவினை விரைவில் டாடா குழுமம் கையகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் ஏர் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 5,422.6 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது.
இது கடந்த ஆண்டில் இந்த விகிதமானது 3,779.36 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா நிறுவனத்தினை கடனுக்கு மத்தியில் தான் மத்திய அரசு தனியாருக்கு அதன் பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. எனினும் டாடா குழுமம் தான் வாங்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பமே நஷ்டம்
இந்த நிலையில், ஆரம்பத்திலேயே 5,400 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தினை காட்டியுள்ளது ஏர் இந்தியா.
விமானத் துறையில் ஒரு காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்த ஏர் இந்தியா நிறுவனம், பெரும் கடன் பிரச்சனைகளால் தத்தளித்து வந்தது. இதற்கிடையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏப்ரல் - செப்டம்பர் 2021 வரையிலான கட்டத்தில் அதன் மொத்த வருவாய் விகிதம் 5,524.23 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 4,578.49 கோடி ரூபாயாக இருந்தது.
செலவு அதிகரிப்பது
எனினும் இந்த விமான நிறுவனத்தின் செலவானது 10,946.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக ஏப்ரல் - செப்டம்பர் 2020ல் 8,357.75 கோடி ரூபாயாக உள்ளது.
இதே 2020 - 21ம் நிதியாண்டில் நிகர நஷ்டமாக 7,017.42 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் டாடா வசமான ஏர் இந்தியா
1932ம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ், 1946ம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1953ம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடமையாக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியா, ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை வெற்றிகரமாக வாங்கியது.
எப்போது முழுமையடையும்
இந்த கையகப்படுத்தலில் டாடா சன்ஸ், 2,700 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கும். எஞ்சிய தொகையான, ஏர் இந்தியாவின் கடனுக்கு டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த பணிகள் அனைத்தையும், டிசம்பர் 31க்குள்ளாக முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சில ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிக்கு காத்திருப்பதால், ஏர் இந்தியா கைமாறுவது தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜனவரி இறுதிக்குள் முடிவடையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய நிறுவனம் போலத் தான்
ஏற்கனவே விமானத்துறையில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு அனுபவம் இருந்தாலும், கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை மீட்டுக் கொண்டு வருவது, சற்று கடினமானதாக இருக்கும். இது மீண்டும் புதிய நிறுவனத்தினை ஆரம்பித்து உருவாக்குவது போலத் தான் என்று பல தரப்பு நிபுணர்களும் தங்களது கருத்துகளை கூறுகின்றனர்.