டாடா குழுமத்தில் உள்ள எந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாலும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்பது ஒவ்வொரு இந்தியரின் எண்ணமாக உள்ளது.
அதனால்தான் டாடா குழுமத்தின் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியை பெற பலரும் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்டுகளுக்கு சந்தோஷம் தரும் புதிய செய்தியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த செய்தி என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
ஏர் இந்தியா பைலட்டுகள்
ஏர் இந்தியா தனது விமானங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளதால் விமானிகளை 65 வயது வரை பணிபுரிய அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜூலை 29 தேதி வெளியிட்ட அறிக்கையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதித்துள்ள அதிகபட்ச வயதான 65 வயது வரை பைலட்டுக்கள் பணிபுரிய அனுமதித்துள்ளது. இதற்கு முன்னர் ஏர் இந்தியாவில் ஓய்வு பெறும் வயது 58 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
200 புதிய விமானங்கள்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, 200 க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்க திட்டங்களின் காரணமாக பைலட்டுகள் உள்பட பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏர் இந்தியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுக்கு பின் ஒப்பந்தம்
எங்கள் தேவையை பூர்த்தி செய்ய, எங்கள் தற்போதைய பயிற்சி பெற்ற விமானிகளை ஓய்வு பெற்ற பிறகு, ஒப்பந்த அடிப்படையில் 65 வயது வரை நீட்டிக்க புதிய ஒப்பந்தம் செய்யப்படும் என்றும், அந்த ஒப்பந்தம் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவர்கள் பணியில் நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு அமைப்பு
இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னர் ஓய்வுபெறும் விமானிகளின் தகுதியை ஆய்வு செய்ய மனிதவளத் துறை, செயல்பாட்டுத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு பரிந்துரை செய்பவர்கள் மட்டும் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வயது வரை முதல்கட்ட ஒப்பந்தம்
58 வயதில் ஓய்வு பெற்ற பின்னர் 63 வயது வரை அதாவது ஐந்தாண்டுகள் முதல்கட்ட பணி நீட்டிப்பு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும், அதில் திருப்திகரமான சேவை இருந்தால் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒப்பந்தம் 65 வயது வரை நீட்டிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.