ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றிய டாடா குழுமம் முதல் நாளில் இருந்தே அதிரடியான நிர்வாக மாற்றம், மறுசீரமைப்பு பணிகளை அடுத்தடுத்துச் செய்து வந்தது. இதனிடையில் புதிய சிஇஓ-வை தேர்வு செய்யும் முயற்சியில் டாடா குழுமம் சில சருக்கல்களைச் சந்தித்த வேளையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழு தலைவராக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கைப்பற்றினார்.
இந்த நிலையில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு முக்கியமான மாற்றங்களும், மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் ஏர் இந்தியாவின் சிஇஓ-வாகக் காம்ப்பெல் வில்சன் மே மாதம் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகப் பணிகளும் வேகமெடுக்கத் துவங்கிய நிலையில் ஜூன் மாதம் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட விஆர்எஸ் திட்டமும் சூடுபிடித்தது.
டாடா குழுமம் - ஏர் இந்தியா
டாடா குழுமம் ஏர் இந்தியா-வை கைப்பற்றிய நாளில் இருந்து ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என அறிவித்தாலும், செலவுகளைக் குறைக்கவும், நிர்வாகப் பணிகளைச் சீர்படுத்தவும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமானது.
ஏர் இந்தியா விஆர்எஸ்
அப்போது தான் டாடா குழுமம் தலைமையிலான ஏர் இந்தியா நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு ஜூன் தன்னார்வ ஓய்வு திட்டம் (VRS) அறிமுகம் செய்தது. தற்போது இந்த விஆர்எஸ் திட்டத்தைச் சுமார் 4500 ஏர் இந்திய ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இளம் தலைமுறை ஊழியர்கள்
இந்த விஆர்எஸ் திட்டம் மூலம் வெளியேறும் ஊழியர்கள் இடத்தில் இளம் தலைமுறை ஊழியர்களைப் பணியில் அமர்த்தி ஊழியர்களின் செயல்திறன் மேம்படுத்தி அதன் மூலம் ஏர் இந்தியாவின் சேவை தரத்தை உயர்த்துவதே டாடா குழுமத்தின் திட்டம். இதனுடன் ஜாக்பாட் ஆக அதிகளவிலான பணத்தை நீண்ட கால அடிப்படையில் சேமிக்க முடியும்.
13,000 ஊழியர்கள்
டாடா குழுமம் ஏர் இந்தியா-வை கைப்பற்றும் போது சுமார் 13,000 ஊழியர்கள் இருந்தனர், இதில் 8000 பேர் ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்கள். மற்ற ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். ஏர் இந்தியா தற்போது நீண்ட காலத் திட்டத்துடன் உலகளாவிய சேவை விரிவாக்க முன்னிறுத்தி இயங்கி வருகிறது.
ஏர் இந்தியா 2.0
ஏர் இந்தியா தற்போது புதிதாகப் பல விமானத்தை வாங்கி வருகிறது, மேலும் உலகில் பல நாடுகளுக்கு விமானச் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் வாடிக்கையாளர் சேவையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்துவரும் நிலையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறமையான ஊழியர்களையும், இளம் தலைமுறையினரையும் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
ஜூன் மாதம் விஆர்எஸ்
ஏர் இந்தியா தனது நிரந்தர ஊழியர்களுக்கு ஜூன் மாதம் விஆர்எஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் திட்டம் முன்பு 55 வயது மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வயது வரம்பை 40 ஆகக் குறைந்துள்ளது. விஆர்எஸ் பெறுபவர்கள் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையில் விண்ணப்பம் செய்யலாம்.
வரலாறு
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனம் அதிகளவிலான கடனில் தவித்து வந்த நிலையில், மோடி அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து டாடா குழுமத்திடம் விற்பனை செய்துள்ளது. ஏர் இந்தியா-வே டாடா ஏர்லைன்ஸ் விமானங்களைக் கைப்பற்றித் தான் துவக்கப்பட்டது பெரும் வரலாறு.