அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையில் இன்றைய நாளில் ஏராளமான மக்கள் நகை கடைகளுக்கு படை எடுக்கிறார்கள். தங்களால் முடிந்த அளவு ஒரு கிராம் நாணயமாவது வாங்கி வைத்து விட வேண்டும் என்பதுதான் ஏராளமான மக்களின் எண்ணம். சற்றே வசதி படைத்தவர்கள் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் கூட இந்த நாளில் நகை வாங்குவது சிறப்பு என கருதி இன்றைய தினம் கடைகளுக்கு செல்கிறார்கள்.
இன்று நகை கடைகளில் நிச்சயம் கூட்டம் நிறைந்து காணப்படும். சிலர் முன்கூட்டியே நகைகளை ப்ரீ புக்கிங் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் நேரடியாக கடைக்கு சென்று அட்வான்ஸ் தொகை போக மீதமுள்ள பணத்தை செலுத்தி நகை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் புதிதாக இன்று தான் கடைக்கு போகிறேன் என்பவர்கள் கூட்ட நெரிசலில் சென்று தங்க நகையோ அல்லது நாணயமோ வாங்க வேண்டி இருக்கும்.

தங்க நாணயம் வாங்குபவர்களுக்கு பிரச்சினை கிடையாது நேரடியாக சென்று எவ்வளவு கிராம் என கூறி நாணயத்தை வாங்கிக்கொண்டு வந்துவிடலாம். ஆனால் நகையாக வாங்குபவர்கள் இந்த கூட்டத்திற்கு மத்தியில் சென்று தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை வாங்குவது என்பது பெரிய சிக்கலான விஷயம். எனவே பெரும்பாலும் மக்கள் இன்று தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை தான் வாங்குவார்கள். கடைகளிலும் இதற்கே பிரத்தியேக ஸ்டால்களும் போடப்பட்டிருக்கும்.
தங்கத்தை நாணயமாக தான் வாங்க போகிறேன் என்பவர்கள் இந்த வெயிலில் புறப்பட்டு கடைக்கு சென்று இந்த கூட்டத்தில் சிக்கி நாணயத்தை வாங்கி வர வேண்டும். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு கிடைத்திருக்கிறது. எப்படி நாம் நமக்கு தேவையான பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் ஆர்டர் செய்து 10 முதல் 20 நிமிடங்களில் டெலிவரி பெற்றுக் கொள்கிறோமோ அதே போல அட்சய திருதியையான இன்று தங்க நாணயம் மற்றும் நகைகளை கூட குயிக் காமர்ஸ் செயலிகளில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.
இன்ஸ்டாமார்ட், செப்டோ போன்ற நிறுவனங்கள் இதற்காகவே முன்னணி நகை விற்பனை நிறுவனங்களோடு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கின்றன. நாம் ஆர்டர் செய்தால் அங்கிருந்து வாங்கி வந்து நமக்கு டெலிவரி செய்து விடுவார்கள். பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இதில் கிடைக்கின்றன. அரை கிராம் , ஒரு கிராம் நாணயங்கள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் நிறுவனம் கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்கோ கோல்டு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிக் பாஸ்கெட் நிறுவனம் தனிஷ்க் நிறுவனத்தோடும், பிளிங்கிட், செப்டோ போன்றவை ஜோய் ஆலுக்காஸ் போன்ற இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களோடும் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அந்த வகையில் இந்த செயலிகளில் நமக்கு குறிப்பிட்ட சில சலுகைகளும் கூட கிடைக்கின்றன. நமக்கு எத்தனை கிராம் நாணயம் வேண்டுமோ அதை கிளிக் செய்து பணம் செலுத்தி விட்டால் போதும் அந்த குறிப்பிட்ட தங்கம் அல்லது வெள்ளி நாணயம் நம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். இதற்காக நாம் இந்த வெயிலில் கடைகளுக்கு சென்று இந்த கூட்டத்தில் சிக்கி அலைய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
ஆனால் இவ்வாறு குயிக் காமர்ஸ் தளம் வழியாக தங்கம் வாங்குவது எளிமையானதாக மாறியிருந்தாலும் குறிப்பிட்ட சில விஷயங்களை கவனிப்பது நல்லது. குறிப்பாக நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் அல்லது வெள்ளி நாணயம் நம்பிக்கை மிகுந்த நிறுவனத்திடம் இருந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அரசின் சான்றிதழ் பெற்ற கடையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வாங்கக்கூடிய நாணயம் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு பெற்று இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதற்கு உரிய ரசீதும் பெற்று கொள்ள வேண்டும். பெரும்பாலும் இவ்வாறு குயிக்காமர்ஸ் வழியாக வாங்கக்கூடிய தங்கம் மற்றும் வெள்ளி நகை, நாணயங்கள் திரும்ப ரிட்டர்ன் செய்ய முடியாத வகையில் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே வாங்குவதற்கு முன்பாக அதில் இருக்கக்கூடிய நிபந்தனைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ரிட்டர்ன் பாலிசி என்ன என்பதை படித்து புரிந்து கொண்டு ஆர்டர் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications

