இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்த பியூச்சர் குரூப் எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் அமேசான் தான் என்று இந்நிறுவனத் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.
அமேசான் போட்ட வழக்கு இன்று நிறுவனத்தை மொத்தமாகச் சிதைத்துள்ளது. இதனால் கிஷோர் பியானியின் நிறுவனம், வர்த்தகம் இழந்தது மட்டும் அல்லாமல் திவாலாகி வங்கிகளுக்குக் கடனை செலுத்த முடியாமல் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் கிஷோர் பியானி நீதிமன்றத்தில் கூறிய பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிஷோர் பியானி
கிஷோர் பியானி தலைமை வகிக்கும் பியூச்சர் குரூப் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரீடைல் நிறுவனமாக இருந்தது மட்டும் அல்லாமல் ரீடைல் வர்த்தகத்தில் பல பிரிவுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வெற்றி கண்டவர். ஆனால் சில தவறான நிர்வாக முடிவுகள் மற்றும் அதிகப்படியான கடன் தான் தற்போது இவரைத் திவாலாக்கியுள்ளது.
அமேசான் - பியூச்சர் குரூப்
இந்நிலையில் அமேசான் - பியூச்சர் குரூப் வழக்கு விசாரணையின் போது பியூச்சர் ரீடைல் லிமிடெட் நிறுவனம் என்வி ரமணா-விடம் "வெறும் 1400 கோடி ரூபாய் கடனுக்காக அமேசான் தற்போது 26000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை அழித்துள்ளது. அமேசான் எதைச் செய்ய வேண்டும் என்று விரும்பியதோ அதைச் சரியாகச் செய்துவிட்டது. தற்போது நாங்கள் வெறும் நூலில் தொங்கிக்கொண்டு இருக்கிறோம்.
நீதிமன்றம்
யாரும் எங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை, இந்த நிலையில் கடையின் உரிமையாளர்கள் வெளியேற நோட்டீஸ் கொடுத்தால் எங்களால் என்ன செய்ய முடியும்." என வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே இந்நிறுவனத்தின் சார்பாகவும் கிஷோர் பியானி சார்பாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமேசான்
இதில் பியூச்சர் குரூப் நிதி நெருக்கடியில் இருக்கும் போது அமேசானிடம் கடுமையான விதிமுறைகள் கீழ் வாங்கிய 1400 கோடி ரூபாயையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலவு செய்த 4800 கோடி ரூபாய்க்காக 835 கடைகளைக் கைப்பற்றியதையும் குறிப்பிட்டு உள்ளது பியூச்சர் ரீடைல்.
374 கடைகள்
தற்போது பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெறும் 374 கடைகள் மட்டுமே உள்ளது. இந்தக் கடைகளிலும் விற்பனைக்குத் தேவையான பொருட்கள் முழுமையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 374 கடைகளுக்கு யார் 26000 கோடி ரூபாய் கொடுப்பார்கள் என்பது தான் தற்போதைய கேள்வி.
முடிவு விரைவில்...
மேலும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனுக்காக வங்கி அமைப்புகள் NCLT அமைப்பை நாடியுள்ள நிலையில், பியூச்சர் குரூப் சமீபத்தில் 5322 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தவணையைச் செலுத்தத் தவறியது. இந்நிலையில் மீதமுள்ள சொத்துக்களைக் கைப்பற்றி வங்கிகள் விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.