இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தக விரிவாக்கத்திற்குப் பல்வேறு நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கைப்பற்றி வரும் அதே வேளையில் நிதி தேவையைப் பூர்த்தி செய்ய ரிலையன்ஸ் வர்த்தகப் பிரிவுகளின் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டும் நிலையில், லாக்டவுன் அறிவிப்பால் ஏற்பட்ட சரிவைக் கடந்து கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கடந்த 6 மாதத்தில் பதிவு செய்து அசத்தியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு மீண்டும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ரூ.15 டூ ரூ.16 லட்சம் கோடி
பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றியதும், சில்வர் லேக் நிறுவனம் சுமார் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்து ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் 1.75 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
இதன் எதிரொலியாகக் கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு 15 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வாரம் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனப் பங்குகளை ஆர்வம் காட்டி வரும் வேளையில் புதன்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 16 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகம்
இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,315 ரூபாயில் இருந்து தடாலடியாக 2,360.80 ரூபாய் வரையில் உயர்ந்து. அந்தக் காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 16 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது.
ஆனால் 20 நிமிடத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 2,360.80 ரூபாயில் இருந்து சரியத் துவங்கிய நிலையில், வர்த்தக முடிவில் 2,324.90 ரூபாய்க்கு முடிவடைந்து 15.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்று இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
அடுத்தடுத்த முதலீடு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தற்போது ரீடைல் பிரிவு வர்த்தகத்தில் 10 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இந்த 10 சதவீத பங்குகளின் மதிப்பு 5.7 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள KKR, L Catterton, அபுதாபியின் முபாதலா முதலீட்டு நிறுவனம், சவுதி பொது முதலீட்டுப் பண்ட் ஆகிய நிறுவனங்கள் ரீடைல் பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ள நிலையில், புதிதாக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி சாப்ட்பேங்க், கார்லைல் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்களில் காத்திருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது ரிலையன்ஸ்.
புதிய உச்சம்
இந்திய சந்தையில் முதல் முறையாக 16 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்.
வெறும் ஒரு வார இடைவெளியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு வரையில் உயர்ந்துள்ள நிலையில் ரிலையன்ஸ்-ன் வளர்ச்சி வாய்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளதைக் காட்டுகிறது.
முக்கிய முதலீடுகள்
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் அடுத்தடுத்த முதலீடுகள் வரும் காரணத்தால், அதிலும் முக்கியமாகக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் சவுதி ஆராம்கோ-வின் 15 பில்லியன் டாலர் முதலீடு, ரிலையன்ஸ் பைபர் இண்டர்நெட் பிரிவில் அரபு முதலீட்டு நிறுவனங்களின் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடு, ரிலையன்ஸ் ரீடைல் பங்கு விற்பனை மூலம் வரும் முதலீடு ஆகியவற்றின் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டு அடுத்த சில மாதங்களில் 18 முதல் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை அடையவும் வாய்ப்புள்ளது.