பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த வேலை நிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வங்கி ஊழியர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளன.
கோரிக்கைகள்
சனி, ஞாயிறு கிழமைகள் விடுமுறை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு சமீபத்தில் அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று சமீபத்தில் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகள்
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் தலைமை தொழிலாளர் கமிஷனர் எஸ்.சி ஜோஷி அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதனை வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டது.
ஒத்திவைப்பு
இதனை அடுத்து ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாபஸ்
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அவர்கள் கூறியபோது, 'டெல்லியில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது என்றும், ஜூலை 1ஆம் தேதி எங்களது கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் கூறினார். எனவே எங்கள் வேலைநிறுத்த போராட்டம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அதனை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.