டெல்லி: வங்கிகளில் பல கோடி கடனை வாங்கி விட்டு வெளி நாடுகளுக்கு ஓடிப்போன விஜய் மல்லையா, நிரவ் மோடி. மொகுல் சோக்சி உள்ளிட்ட பல மோசடியாளர்களின் சொத்துகளை விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மீட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது குறித்து லோக் சபாவில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களிடமிருந்து, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஏழு ஆண்டுகளில் 5.49 லட்சம் கோடி ரூபாய் வாரக் கடனை வங்கிகள் மீட்டுள்ளன.
வாரக்கடன் மீட்பு
அந்த வகையில் கடனை வாங்கி விட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளி நாடுகளுக்கு தப்பித்து ஓடிய, விஜய் மல்லையா, மொகுல் சோக்சி, நிரவ் மோடி உள்ளிட்டடோரின் சொத்துக்களை விற்று, 13,109.17 கோடி ரூபாய் கடனை வங்கிகள் மீட்டுள்ளன. இதில் கடைசியாக கடந்த ஜூலை மாதத்தில் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு, 792 கோடி ரூபாய் வாரக்கடன் மீட்டுகப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக பணம்
இவ்வாறு மீட்கப்பட்ட தொகையானது சம்பந்தபட்ட வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கிகளில் கடன் வாங்கி தப்பி ஓடியவர்கள் தப்ப முடியாது. இதனால் வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது.
கூடுதல் தொகைக்கான கோரிக்கை
மக்களவையில் நேற்று இரண்டாவது பிரிவு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் அரசின் செலவுக்காக, கூடுதல் நிதிக்காக கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் பட்ஜெட் தொகையை விட கூடுதலாக 3.73 லட்சம் கோடி ரூபாய் செலவுக்கான மானியக் கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
எதற்காக கூடுதல் நிதி தேவை
இந்த கூடுதல் செலவினத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தொகைக்காக, 62,000 கோடி ரூபாயும், இதே உரங்களுக்கு மானியமாக 58,430 கோடி ரூபாயும், ஏற்றுமதி ஊக்கச்சலுகையாக 53,123 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்காக 22,039 கோடி ரூபாயும் நிதியும் கூடுதலாக அரசுக்கு தேவைப்படுகின்றது என கூறியுள்ளார்.