இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் அடுத்தடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் மெகா சைஸ் திட்டங்களுடன் களத்தில் இறங்க காத்திருக்கும் நிலையில் இந்தியாவில் எந்த ஊர் மக்கள் அதிகளவிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் பதிவாகியிருக்கும் நகரங்களில் முதல் 2 இடத்தைப் பிடித்தது தென் மாநில நகரங்கள் தான் என்பது கூடுதல் சிறப்பு.
முதல் இரண்டு இடம்
இந்தியாவில் அதிக டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடந்துள்ள நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெங்களூர் பிடித்துள்ளது. இந்தியாவின் சாப்ட்வேர் ஹப் எனப் போற்றப்படும் பெங்களூரில் அதிகளவிலான பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில் படித்த பட்டதாரிகள், ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதாலும், பல முன்னணி பேமெண்ட் நிறுவனங்கள் பெங்களூரில் இருந்து இயங்கும் காரணத்தால் பெங்களூர் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் செய்கிறார்கள்.
2வது இடம் எந்த நகரத்திற்குத் தெரியுமா..?
நம்ம சென்னை
கிட்டத்தட்ட பெங்களூரை போலவே சென்னையிலும் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் புதிய தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரு, சென்னையைத் தாண்டி மும்பை, புனே ஆகிய நகர மக்கள் அதிகளவிலான டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் செய்யவதாக ஆன்லைன் பேமெண்ட் பிராசசர் நிறுவனமான வோர்ல்டுலைன் இந்தியா தெரிவித்துள்ளது.
யூபிஐ
தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் யூபிஐ, டெபிட் கார்டு, IMPS மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாகத் தான் செய்யப்படுகிறது. இதில் மக்கள் அதிகம் விரும்பும் ஒரு டிஜிட்டல் பணப் பரிமாற்ற தளம் யூபிஐ தான் என வோர்ல்டுலைன் இந்தியா தெரிவித்துள்ளது.
54 டிரில்லியன் ரூபாய்
2019ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 டிரில்லியன் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு அதில் 54 டிரில்லியன் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 பில்லியன் பணப் பரிமாற்றங்கள் யூபிஐ தளத்தின் வாயிலாகச் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் யூபிஐ, டெபிட் கார்டு, IMPS மற்றும் கிரெடிட் கார்டு ஆகிய 4 பரிமாற்றத்தில் யூபிஐ தான் மிகவும் வேகமான பரிமாற்ற முறையாக உள்ளது.