நம் நாட்டில் தினுசு தினுசாக மோசடி சம்பவங்கள் நிகழத்தான் செய்கிறது. பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதில் சிக்கிய முதியவர் ஒருவர் ரூ.5.1 லட்சத்தை இழந்துள்ளார். சமீபத்திய நாட்களாக நடக்கும் மோசடிகளில் மக்கள் எவ்வளவு தொகையை இழந்திருக்கின்றனர் என்பதை பார்த்தால் தலையே சுற்றுகிறது. ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.10 லட்சம், ஏன் சிலர் ரூ.1 கோடி இழந்த கதைகளும் உண்டு. இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஏமாந்த அனைவரும் ஆசைக்கு மயங்கி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியவர்கள். இதே விஷயம் தான் இந்தச் சம்பவத்திலும் நிகழ்ந்துள்ளது. மோசடி எப்படி நடந்தது? முதியவர் எப்படி ஏமாற்றப்பட்டார்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
பாதிக்கப்பட்ட முதியவர் பெங்களூரின் சீகேஹள்ளியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 72. மே 22ஆம் தேதி அன்று அந்த முதியவருக்கு 8780179502 என்ற நம்பரில் இருந்து ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் "APPY ICICI பென்ஷன் கார்டு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பெற்றுக் கொண்டால், உடனே நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கு 25% தள்ளுபடி, பெட்ரோல் டீசலுக்கு 20 சதவீத தள்ளுபடி, மேலும் வருடாந்திர கட்டணங்கள் எதுவுமே இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு கீழ் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
தனக்கு வந்த மெசேஜ் உண்மையில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து தான் வந்திருக்கிறது என்று அந்த முதியவர் நம்பியுள்ளார். இதனால் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். உடனே அவருடைய மொபைலில் ஏபிகே ஃபைல் தானாக டவுன்லோட் ஆனது. சில நேரத்திலேயே அடுத்தடுத்து பல OTP-கள் அவருடைய மெசேஜுக்கு வரத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பதே அந்த அப்பாவி முதியவருக்குத் தெரியவில்லை. ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் மற்றும் அவர் வாங்கி இருந்த கிரெடிட் கார்டுகளில் இருந்து தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் பணம் டெபிட் செய்யப்பட்ட பிறகு அவருக்கு மெசேஜ் கூட வந்துள்ளது. முதலில் மோசடிக்காரர்கள் ரூ. 7,604-ஐ தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். அடுத்ததாக 4,98,913 ரூபாயை தங்களுடைய அக்கவுண்டிற்கு மாற்றியுள்ளனர். இப்படி மொத்தமாக ரூ. 5,06,517-ஐ அபகரித்துள்ளனர்.
முதியவர் டவுன்லோட் செய்த ஏபிகே ஃபைலில் தீங்கிழைக்கும் சாஃப்ட்வேர் இருந்துள்ளது. APK ஃபைல் டவுன்லோட் செய்யப்பட்டதும், முதியவரின் மொபைல் நம்பர், வங்கி விவரங்கள், ஓடிபி என அனைத்தையும் அவருடைய அனுமதியில்லாமலேயே பார்த்துள்ளனர்.
அது வரையில் தனக்கு நடந்த மோசடி குறித்து தெரியாத முதியவர் பணம் டெபிட் செய்யப்பட்ட பிறகு போலீசில் புகார் அளித்துள்ளார். அங்கு ஐடி சட்டம் மற்றும் பிஎன்எஸ் பிரிவு 318 மற்றும் 319- இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்ட பணத்தை பிளாக் செய்வதற்கும் விசாரணை நடந்து வருகிறது. வங்கிகளில் இருந்து பெறப்பட்ட செய்தியாக தோன்றினாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்வது முக்கியம்.
பொதுவாக அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் இருந்து மெசேஜ் வரும்போது அதில் கிரீன் டீக் மார்க் இருக்கும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். எனவே இனிவரும் காலங்களில் விழிப்புணர்வோடு செயல்பட்டால் தான் இது போன்ற மோசடி சம்பவங்களை குறைக்க முடியும். இந்த பதிவை படிப்பவர்கள் உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் குடும்பத்தினருடன் மோசடிக்காரர்களின் யுக்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் ஒரு சில சம்பவங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications