கட்டாய ஹால்மார்க் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூன் 01,2022 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இது தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது.
இது 3 புதிய வகைகளை கொண்டதாக இருக்கும். இது 20 கேரட், 23 கேரட், 24 கேரட் என இருக்கும்.
ஹால்மார்க் கட்டாயம்
சர்வதேச வர்த்தக அமைப்பான WTO, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.இதற்கிடையில் தான் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடுகளை தவிர்க்க திட்டம்
மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்கட்ட திட்டம் அமலுக்கு வந்தது. இதில் தங்க நகை வர்த்தகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனுடன் பிஐஎஸ் (BIS) ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை எப்படி?
இந்த நடைமுறையினால் நகை விற்பனையாளர்கள் 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். இதோடு இந்திய தர நிர்ணய அமைப்பு பிஐஎஸ் சான்றான ஹால்மார்க் முத்திரை இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களில் கட்டாயம்
ஜூன் 01, 2022 முதல் கட்டாயம் ஹால்மார்க் செய்வதன் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் செயல்படுத்தப்பட உள்ளது.