பிட்காயின் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும், யாராலும் தடை செய்ய முடியாத அளவிற்குச் சுமார் 2.5 டிரில்லியன் டாலர் சந்தையாக உயர்ந்துள்ளது.
சீனா-வை போல் முதலீட்டாளர்கள் மற்றும் மக்களின் நிலையைக் கண்டுகொள்ளாமல் எந்த நாடும் முடிவு எடுக்க விருப்பம் இல்லாத காரணத்தால் தற்போது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், உட்படப் பல நாடுகள் கிரிப்டோ சந்தையை எப்படி ஒழுங்கு முறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்து ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும், பிட்காயின் முதலீட்டாளர்களைக் குதூகலப்படுத்தும் வகையிலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிரிப்டோ சந்தை
கிரிப்டோ சந்தையில் மிகவும் முக்கியமான கரன்சியாக விளங்கும் பிட்காயின் 1,00,000 டாலர் அளவீட்டை அடையும் எனப் பல மாதங்களாகச் சந்தை வல்லுனர்கள் கூறி வரும் நிலையில் இது எப்படிச் சாத்தியம் என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு உலக நாடுகள் அனைத்தும் நீண்ட கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தில் முதலீடு செய்து வருவதால் பங்குச்சந்தையும், கடன் சந்தையும் அதிகப்படியான லாபத்தை அளிக்க உள்ள நிலையில் புதிய முதலீடாக விளங்கும் கிரிப்டோவின் அவசியம் என்ன..?
பிட்காயின் 1,00,000 டாலர்
அதேவேளையில் 50000 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படும் பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயர முதலீட்டு ஆதாயம் என்ன என்பது தான் முதலீட்டாளர்கள் முன்வைக்கப்படும் ஒட்டுமொத்த கேள்வியின் சாராம்சம். இதற்கான பதிலை அமெரிக்காவின் கோல்டுமேன் சாச்சஸ் குரூப் தெரிவித்துள்ளது.
கோல்டுமேன் சாச்சஸ்
உலகம் முழுவதும் மக்கள் டிஜிட்டல் சொத்துக்களாக விளங்கும் கிரிப்டோகரன்சி-யை அதிகளவில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தங்கம் மீது தற்போது இருக்கும் முதலீடுகள் மற்றும் எதிர்காலத்தில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டு இருக்கும் முதலீடுகள் அனைத்தும் பிட்காயின் மீது திரும்ப அதிகளவிலான வாய்ப்பு உள்ளது.
மதிப்பீடு
இதனால் பிட்காயின் விரைவில் 1,00,000 டாலர் அளவிலான உயர்வைத் தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனக் கோல்டுமேன் சாச்சஸ் குரூப் தெரிவித்துள்ளது. தற்போது தங்கத்தின் "store of value" market மதிப்பு 2.6 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில் பிட்காயின் 700 பில்லியன் டாலராக இருக்கிறது எனக் கணித்துள்ளது.
50 சதவீதம் வளர்ச்சி
இந்நிலையில் பிட்காயின் விலை அடுத்த 5 வருடத்திற்குச் சராசரியாக 17 -18 சதவீதம் உயர்ந்து மொத்தமாக 50 சதவீதம் உயர்ந்தால் கூடப் பிட்காயின் மதிப்பு எளிதாக 1,00,000 டாலரைத் தொடரும் எனக் கோல்டுமேன் சாச்சஸ் குரூப்-ன் குளோபல் FX மற்றும் EM பிரிவு தலைவர் Zach Pandl தெரிவித்துள்ளார்.
10 வருட ஒப்பீடு
இதேவேளையில் கடந்த 10 வருடத்தில் தங்கம் மீதான முதலீட்டுக்குக் கிடைத்த லாபத்திற்கும், கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டுக்குக் கிடைத்த லாபத்திற்கும் பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. 2016ல் பிட்காயின் மீதான முதலீடு மட்டும் சுமார் 4,700 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
பிட்காயின் நெட்வொர்க்
பிட்காயின் நெட்வொர்க் படி 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இதுவரை 18.89 பிட்காயின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெறும் 2 மில்லியன் பிட்காயின் மட்டுமே இனி வரும் காலகட்டத்தில் உற்பத்தி செய்ய முடியும்.
பிட்காயின் 1,00,000 டாலர் நிச்சயம்
பிட்காயின் நெட்வொர்க் மூலம் மீதமுள்ள பிட்காயின்களை விரைவில் உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 2 மில்லியன் பிட்காயினும் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டால் பிட்காயின் விலை சப்ளை டிமாண்ட் காரணமாகத் தினமும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு வெகு விரைவில் 100000 டாலர் என்ற உயரத்தைத் தொடும்.
தடை..
இதேவேளையில் அமெரிக்கா, இந்தியா உட்பட முன்னணி பொருளாதார நாடுகள் கிரிப்டோகரன்சிக்குத் தடை விதித்தாலோ அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் உடன் 50 சதவீதம் வரி போன்ற அறிவிப்பை வெளியிட்டாலோ கிரிப்டோ சந்தையின் ஆதிக்கம் பெரிய அளவில் மாற வாய்ப்பு உள்ளது. இதேவேளையில் அனைத்து நாடுகளும் பிரைவேட் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வதில் உறுதியாக உள்ளது.