2020ல் பிட்காயின் மீதான முதலீடும், வளர்ச்சியைக் கண்டு பல நாடுகள் தற்போது பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சியை முறைப்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து கிரிப்டோகரன்சி முதலீட்டைச் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் வாயிலாகக் கிரிப்டோகரன்சி முதலீட்டுச் சந்தைக்குப் புதிதாகப் பல லட்சம் முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக் காலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிட்காயின் மீதான முதலீடுகள் அதிகரித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 28,352.63 டாலருக்கு உயர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25ஆம் தேதி 25,000 டாலரை தொட்ட பிட்காயின், 26ஆம் தேதி 26,000 டாலரையும், 27ஆம் தேதி 27,647.23 டாலர் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பிட்காயின் சந்தையின் மொத்த மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலருக்குத் தாண்டியுள்ளது.
இதோடு கடந்த 24 மணிநேர வர்த்தகத்தில் பிட்காயின் அதிகப்படியாக 28,352.63 டாலர் விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
3 முக்கிய நிறுவனங்கள்
உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகக் கருதப்படும் விசா நிறுவனத்தின் மதிப்பு 460.06 பில்லியன் டாலர், உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் மதிப்பு 463.63 பில்லியன் டாலர், உலகின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் மதிப்பு 406.00 பில்லியன் டாலர்.
விசா, வால்மார்ட், சாம்சங் ஆகிய 3 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது பிட்காயின்.
தடாலடி வளர்ச்சி
பிட்காயின் மதிப்பு டிசம்பர் 16ஆம் தேதி 20,000 டாலர் தொட்ட பின்பு நிலையாக மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கிட்டதட்ட 10 நாட்களில் பிட்காயின் மதிப்பு சுமார் 7,500 டாலர் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 27,666.17 டாலர் வரையில் உயர்ந்ததது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக 28,352.63 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
2020ல் பிட்காயின்
2020ல் மட்டும் பிட்காயின் மதிப்பு சுமார் 275.49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது பிட்காயின்.
மேலும் பிட்காயின் முதலீட்டுச் சந்தையில் தற்போது அதிகளவில் தனியார் முதலீட்டாளர்கள் இறங்கியுள்ள காரணத்தால் இனி வரும் காலகட்டத்தில் பிட்காயின் மதிப்பு வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் இனி தேவையில்லை
தங்கம் தற்போது பல்வேறு காரணங்களால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளனர்.
இதனால் இனி வரும் காலகட்டத்தில் தங்கம் தனது முதலீட்டு ஆதாரத்தைக் கணிசமாக இழக்க வாய்ப்பு உள்ளதாகவும் சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.