இந்தியாவில் உள்ள மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை முதன்முறையாக 10 கோடியைத் தாண்டியது. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக, பங்குச் சந்தை தொடர்பான தரவு அளவீடு ஒன்று சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட ட்விட்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள் பெரும் பங்கை வகிக்கிறது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 80 சதவீத முதலீட்டாளர்கள் இரு நகரங்களில் இருந்து மட்டுமே வருவதாகத் தரவுகள் கூறுகிறது.
இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையில் நாடு முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் சந்தைகளுக்கு முதலீடு செய்ய வந்தாலும், பங்குச் சந்தையில் உண்மையான வர்த்தகத்தின் பெரும்பகுதி கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இரண்டு நகரங்கள் அதாவது மும்பை மற்றும் அகமதாபாத்-ல் இருந்து மட்டுமே வருகிறது.
செபி தரவுகள்
இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தரவுகள் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் ஜூலை வரையிலான தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) மொத்த ரொக்கச் சந்தை விற்றுமுதலில் மும்பை 67.8 சதவீதமும், அகமதாபாத்-ல் 11.4 சதவீதமும் கொண்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இதேபோல் மும்பை பங்குச்சந்தையில், இந்த இரண்டு நகரங்களும் இதே காலகட்டத்தில் பணச் சந்தை விற்றுமுதலில் கிட்டத்தட்ட 58 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இப்படி ஒட்டுமொத்த பங்கு முதலீட்டும் மும்பை மற்றும் அகமதாபாத் சார்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மும்பை
பெரும்பாலான நிறுவன முதலீட்டாளர்கள் - வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், இன்சூரன்ஸ் மேஜர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் மும்பை பெரும்பான்மையான பங்கைக் கொண்டுள்ளது.
பிற நகரங்கள்
இந்திய பங்குச் சந்தையின் பணப் பிரிவு விற்றுமுதலில் டெல்லி (4.6 சதவீதம்), சென்னை (5.1 சதவீதம்) மற்றும் கொல்கத்தா (0.9 சதவீதம்), பெங்களூரு (0.7 சதவீதம்) மற்றும் ஹைதராபாத் (2.4 சதவீதம்) ஆகியவையும் சிறிய பங்கை மட்டுமே கொண்டுள்ளன.