மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்த நிலையில், ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாகவும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு எதிரொலி காரணமாகப் பட்ஜெட் அறிவிக்கும் முன்பு மும்பை பங்குச்சந்தை மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யத் தற்போது இருக்கும் ஓரே வாய்ப்புப் பட்ஜெட் அறிவிப்புகள் தான்.
மும்பை பங்குச்சந்தை
ஜனவரி 17ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,308 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் இன்று 56,718 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதில் குறிப்பாக வெறும் 7 நாட்களில் சென்செக்ஸ் குறியீடு மட்டும் சுமார் 4,590 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 1,377 புள்ளிகளை இழந்துள்ளது.
30 பங்குகள் குறியீடு
மும்பை பங்குச்சந்தையின் சரிவுக்கு முன்பு 30 பங்குகள் குறியீடு கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதிகரித்து 62,245 புள்ளிகள் வரையில் எட்டியது. ஆனால் இன்று அமெரிக்கப் பெடரல் வங்கி அறிவிப்புக்குப் பின்பு தொடர்ந்து சரிவை பதிவு செய்து வருகிறது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் மார்ச் மாத வட்டி விகித உயர்வு, பத்திர கொள்முதல் திட்டத்தை நிறுத்தும் முடிவு ஆகியவை இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையையும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்குத் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் அறிக்கை தான் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்யப் புதிய வழிகாட்டுதலைத் தரும்.
பட்ஜெட் 2022
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் தற்போது கொரோனா ஒமிக்ரான் பிடியில் சிக்கியிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுத்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் முக்கியக் கருவியாக உள்ளது. இதனால் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இந்தப் பட்ஜெட் 2022 மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி
மும்பை பங்குச்சந்தை தற்போது பட்ஜெட் எதிரொலியால் சரியவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல்-க்குப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குச் சாதகமான அறிவிப்புக்குள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாகச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர வாய்ப்பு உள்ளது.
3 பட்ஜெட் அறிக்கை
இதேபோல் கடந்த 3 பட்ஜெட் அறிக்கை காலகட்டத்தைப் பார்க்கும் போது, பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சரிவுடனே காணப்பட்டது, ஆனால் பட்ஜெட் அறிவிப்புக்குப் பின்பு உயரத் துவங்கியது. இதனால் பட்ஜெட் 2022 அறிவிப்புகள் மும்பை பங்குச்சந்தையின் சரிவு பாதையைக் கட்டாயம் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பும் என நம்பப்படுகிறது.