பொதுவாக பங்குச் சந்தைகள் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்ப வினையாற்றும். அதிலும் மத்திய பட்ஜெட் போன்ற பெரிய நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த 2019 முதல் கடந்த ஆண்டு வரையிலான காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் பங்குச் சந்தையின் செயல்திறனை பார்த்தால், முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கையும் அச்சமும் நிலவியதைக் காட்டுகிறது.
கடந்த ஆறு முறை பட்ஜெட் தாக்கலின் போது, பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய வாரத்தில் 2 முறை சென்செக்ஸ் சரிவை சந்தித்தது, அதேவேளையில், 2 முறை 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 6 பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகளின் போது, சென்செக்ஸ் கண்ட மிக மோசமான சரிவு என்றால் அது, 2020 பட்ஜெட்டுக்கு முன்னதாக சுமார் 5 சதவீதம் வீழ்ச்சி கண்டதுதான்.
அதேபோல், பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு சென்செக்ஸ் செயல் திறனை பார்த்தால், அது பட்ஜெட்டுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாகவே உள்ளது. உதாரணமாக 2020 பிப்ரவரியில் பட்ஜெட்டுக்கு முன் பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டு இருந்தாலும், பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து இழப்புகளையும் திரும்ப பெற்று மீண்டது. இதே போல், 2021 பிப்ரவரியிலும் பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த வாரத்தில் சென்செக்ஸ் 6 சதவீதம் உயர்ந்தது.
தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனால் வரும் நாட்களில் பங்குச் சந்தைகளின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஆனால் இடைக்கால பட்ஜெட் பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சமீபத்திய ஆண்டுகளில், மத்திய பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட பெரும்பாலான சீர்த்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதால், பங்குச் சந்தையில் பட்ஜெட்டின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
பேஸ்360 இணை நிறுவனரும் மற்றும் தலைமை உலகளாவிய மூலோபாயவாதியுமான அமித் கோயல் கூறுகையில், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் பெரும்பாலும் நிகழ்வே இல்லாததாகவே இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். ஏனெனில் இது வாக்கு கணக்கு ஆகும். மேலும், அரசாங்கத்திடம் இருந்து பெரிய கொள்கை மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
எச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸின் எம்டி மற்றும் சிஇஓவான தீரஜ் ரெல்லி கூறுகையில், மூலதனச் சந்தைகள் வாக்கெடுப்பு மூலம் சிறிது உற்சாகமடையலாம், ஆனால் பொதுத்தேர்தல் முடிவுகள் மற்றும் வழக்கமான பட்ஜெட்டுக்காக காத்திருக்க விரும்பலாம் என்று தெரிவித்தார். அதாவது மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது பங்குச் சந்தைகள் வினையாற்றும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications