இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக இந்திய ரீடைல் மற்றும் டிஜிட்டல் சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்றப் பல முயற்சிகள் செய்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மக்களுக்கு ஓரே தளத்தில் அனைத்து விதமாகச் சேவைகளையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது.
இதன் படி அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் இந்தியாவில் புதிதாக ஆன்லைன் டிஜிட்டல் தங்க விற்பனையை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் கோல்டு
அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் தங்கத்தைக் குறைந்தபட்சம் 5 ரூபாய்க்கு முதல் வாங்கும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய சேவையை அமேசான் "Gold Vault" எனப் பெயரிட்டுள்ளது.
இப்புதிய சேவைக்காக அமேசான் Safegold நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
24 கேரட் தங்கம்
இக்கூட்டணி மூலம் அமேசான் தளத்தில் Safegold நிறுவனம் 24 கேரட் தங்கத்தை அமேசான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய உள்ளது. இப்புதிய சேவையின் கீழ் வாடிக்கையாளர் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும்.
தினசரி சந்தை விலை மாற்றத்தின் கீழ் தங்கத்தை வாங்கவும், விற்பனை செய்ய முடியும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதோடு Safegold பாதுகாப்பு லாக்கர்-ஐயும் வாடகைக்குக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள்
அமேசான் நிறுவனத்தைப் போல இந்தியாவில் பேடிஎம், போன்பே, கூகிள் பே, மொமிகிவிக், ப்ரீசார்ஜ் ஆகிய பிற டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை நிறுவனங்களும் தங்கத்தை டிஜிட்டல் முறையில் விற்பனை செய்கிறது.
மேலும் பேடிஎம், கூகிள் பே மற்றும் போன்பே ஆகிய தளத்தில் தங்கத்தைக் குறைந்தபட்சம் 1 ரூபாய்க்கு கூடத் தங்கம் வாங்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சியோமி
சமீபத்தில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி-யும் தனது பேமெண்ட் தளத்தில் டிஜிட்டல் கோல்டு விற்பனையை அறிமுகம் செய்தது. மேலும் சியோமி நிறுவனத்தில் தங்கம் வாங்கும் அனைவரும் சியோமியின் டிஜிட்டல் பேமெண்ட் தளமான MiPay மூலம் மட்டுமே வாங்க முடியும்.
அக்ஷய திருதியை
டிஜிட்டல் தங்கம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான ஈர்ப்பு இல்லாத நிலையில், ஏப்ரல் மாதம் அக்ஷய திருதியை நாளில் பேடிஎம் தனது டிஜிட்டல் கோல்டு திட்டத்தின் மூலம் 37 கிலோ தங்கத்தையும், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் பிளிப்கார்ட்-ன் போன்பே நிறுவனம் சுமார் 100 கிலோ தங்கத்தை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
மேலும் இவ்விரு தளத்திலும் டிஜிட்டல் தங்க விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
போட்டி
தற்போது அமேசான் நிறுவனமும் டிஜிட்டல் தங்க விற்பனை களத்தில் குவிந்துள்ளதால் இப்பிரிவு வர்த்தகத்தில் அதிகளவிலான போட்டி உருவாகும் எனத் தெரிகிறது. இதனால் அடுத்த வருட அக்ஷய திருதியை நாளில் தங்கத்திற்குத் தள்ளுபடி கொடுத்தாலும் வியப்பில்லை.