இந்திய பெற்றோர்கள் மத்தியில் Byjus என்ற பெயர் மிகவும் பிரபலம். அதே போல தொழில் முனைவோர் மத்தியில் இதன் நிறுவனர் பைஜூஸ் ரவீந்திரன் என்றாலே தனி மதிப்பு உண்டு. ஆனால் தற்போது அது அனைத்துமே சுக்கு நூறாகிவிட்டது. பைஜூஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். பிடெக் முடித்து பொறியாளராக வேலையை தொடங்கினார். இவர் ஒரு முறை சிஏடி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அப்போது அவர் அளித்த பயிற்சியில் நண்பர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தனர். அவரும் தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனை அடுத்து பெரிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலரும் ரவீந்திரனின் ஆலோசனை பெறத் தொடங்கினர். இதுதான் பைஜூஸ் என்ற நிறுவனத்திற்கு விதை போட்டது.

இந்தியாவில் போட்டி தேர்வுகளும் தொழில்நுட்பமும் வளர்ந்து வந்த நிலையில் இரண்டையும் இணைத்து 2007ஆம் ஆண்டு பைஜூஸ் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினார். படிப்படியாக பைஜூஸ் நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. இதனை அடுத்து திறமையான ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையை அறிமுகம் செய்தார். இது தான் கேம் சேஞ்சர். இதில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில், பைஜூஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. இதில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு பைஜூஸ் நிறுவனத்துக்கு அந்நிய முதலீடுகள் குவிந்தன. 2016ஆம் ஆண்டு மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பைஜூஸில் முதலீடு செய்தார். இதனை அடுத்து 2020ஆம் ஆண்டு சின்னசாமி விளையாட்டரங்கில் 25 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற வகுப்பை நடத்தி காட்டினார். இதனால் முதலீட்டாளர்கள் ஓடோடி வந்து இதில் முதலீடு செய்தனர்.
கிட்டதட்ட 28,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடாக மட்டுமே பைஜூஸுக்கு வந்தது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தொழில்முனைவோரின் ஆசானாக மாறினார் ரவீந்திரன். திறமையை விளம்பரப்படுத்து முதலீடுகளை ஈர்த்து தன்னை கிங் என நிரூபணம் செய்தார். ரவீந்திரனின் சொத்து மதிப்பும் உயர தொடங்கியது. பைஜூஸ் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது. ஆனால், திடீரென இந்த நிலை மாறத் தொடங்கியது. ரவீந்திரன், தான் பெற்ற முதலீடுகளை, வெவ்வேறு நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்யத் தொடங்கிய போது பிரச்னை உருவானது.
இதனால் 2024 இல் பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு குறித்து முடிவெடுக்க ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பல பங்குதாரர்கள் வலியுறுத்தினர். இது தான் பைஜூஸின் சரிவுக்கு ஆரம்பமானது. பொருளாதாரப் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, ரவீந்திரனுக்கு எதிராக ஒரு தேடுதல் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, பைஜூஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ரவீந்திரனை நீக்க பங்குதாரர்கள் நெருக்கடி தந்தனர். தொடர்ந்து பல சட்ட சிக்கல்கள் எழுந்து பைஜூஸ் நிறுவனமே வீழ்ந்துவிட்டது.
பைஜூஸ் நிறுவனம் சரியான சமயத்தில் சரியான பாதையில் நுழைந்ததே குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி அடைய காரணம். ஆனால் அந்த வேகமே அதன் வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டது. பைஜூஸ் நிறுவனம் ஈஎம்ஐ முறையில் பயிற்சி, அதிகமான மாணவர்களை வரவழைக்க வேண்டும் சேர்த்து விட வேண்டும் என ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. அதாவது வேகமாக கிடைத்த வளர்ச்சியை தக்க வைக்கவும் இன்னும் வேகமான வளர்ச்சியை அடையவும் யதார்த்ததை மீறி ரவீந்திரன் செய்த முயற்சிகளே நிறுவனம் திவால் நிலைக்கு செல்ல காரணமானது. இதற்காக கடன் வாங்கினார்.
கொரோனா முடிந்து பள்ளிகள் நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவர் சேர்க்கை குறைந்தது, இதற்கிடையே முதலீட்டாளர்கள் அழுத்தம் ஒரு புறம் என தவறான முடிவுகளை எடுத்து ரவீந்திரனே தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை சரித்து விட்டார். இதன் விளைவு ரவீந்திரன் இன்று பல சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்து வருகிறார்.
பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இன்று ஆறு மாத கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏப்ரல் 2024 முதல், ரவீந்திரன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பான பல நீதிமன்ற உத்தரவுகளை மீறியதைக் குறிப்பிட்டு, சிங்கப்பூர் நீதிமன்றம், அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. ஆனால் தன்னை சுற்றி பொய்யான மற்றும் ஒருதலைப்பட்சமான தகவல்கள் கட்டமைக்கப்படுவதாக ரவீந்திரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications


