தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக UPI, NEFT, RTGS மற்றும் IMPS போன்ற பல வழிகளின் மூலம் மக்கள் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த வசதியினால் வங்கிக்கு செல்லும் வேலை வெகுவாக குறைந்து விட்டது. இப்படி செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனையால் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்புமா? எவ்வளவு பரிமாற்றம் நடக்கிறது என்பதை வரித்துறை கண்காணிக்குமா? நோட்டீஸ் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற பல கேள்விகளுக்கு இந்தப் பதிவில் பதிலை பார்ப்போம்.
வரி நிபுணர்களின் கூற்றுப்படி நீங்கள் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்பதற்கான தகுதாரா ஆதாரம் இருக்க வேண்டும். மேலும் உங்களுடைய வருமான கணக்கில் அந்த விவரங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாகப் பணம் அனுப்பலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை எப்போது பிரச்சனையாகும்?:
வங்கி கணக்கிற்கு வரும் அதிகபட்ச தொகை: திடீரென வங்கி கணக்கிற்கு பெரிய தொகை வந்தால் அப்போது பிரச்சினை ஏற்படும். ஒருவேளை நீங்கள் அந்த வருமானத்தை தொழில் வருமானமாகவோ அல்லது முதலீட்டு வருமானமாகவோ ஐடிஆர் தாக்கல் செய்யும்போது காண்பித்திருந்தால் பிரச்சனையில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் இந்தத் தொகை உங்கள் கணக்கிற்கு எப்படி வந்தது? என்று வருமான வரித்துறை கண்காணிக்கும்.
அதிக தொகை கொடுத்து சொத்து வாங்குதல்: NEFT அல்லது RTGS மூலம் அதிக அளவிலான தொகையை கொடுத்து வீடோ அல்லது நிலமோ வாங்கியிருந்தால் அந்த பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அப்படி சொல்ல முடியாத பட்சத்தில் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது.
பங்குச்சந்தை முதலீடுகள்: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறீர்கள். அதற்கு அதிக லாபமும் கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் கணக்கு வைத்துள்ள நிதி நிறுவனங்கள் வருமானவரித்துறைக்கு அது தொடர்பான தகவல்களை தெரிவித்து விடும். இவற்றை நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது தெரிவிக்கவில்லை என்றாலும்.. உங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
வங்கிகளும் உங்களுடைய பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும். சுமார் 56-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து நீங்கள் செய்யும் பரிவர்த்தனை விபரங்கள் வருமானவரித் துறையை சென்றடையும். எனவே எந்த வருமானத்தையும் மறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு ITR தாக்கல் செய்தால் அது பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
வருமானவரித்துறை எப்படி இதையெல்லாம் கண்காணிக்கிறது?: வங்கிகள், நிதி நிறுவனங்கள், சார்பதிவாளர் அலுவலகம் போன்ற பல இடங்களில் இருந்து செய்யப்படும் அதிகபட்ச பரிவர்த்தனை விவரங்களை கண்டிப்பாக அந்தந்த நிறுவனங்கள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுடைய ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட் மற்றும் பார்ம் 26 ஏஎஸ் அறிக்கைகளில் பதிவேற்றப்படும்.
பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனை, ஜிஎஸ்டி அறிக்கைகள் மற்றும் டிடிஎஸ் தகவல்கள் என அனைத்தையும் வருமான வரித்துறை ஒப்பிட்டுப் பார்க்கும்.
நோட்டீஸ் வராமல் தற்காத்துக் கொள்ள ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் அனுவல் இன்பர்மேஷன் ஸ்டேட்மெண்ட் மற்றும் பார்ம் 26 ஏஎஸ் அறிக்கைகளில் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதாவது பிழை இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். அதன் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் வருமானமாக இருந்தாலும் சரி.. முதலீட்டு மூலம் கிடைத்த லாபமாக இருந்தாலும் சரி.. அதை வருமானவரி தாக்கல் செய்யும்போது தெள்ளத்தெளிவாக குறிப்பிட வேண்டும்.


Click it and Unblock the Notifications
