சென்னை: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நாளிதல் ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அதில் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ கேஒசி ஆவணங்கள் சரிபார்க்க, கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஒட்டுனர் உரிமம், இதோடு என்பிஆர் என்னும் தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் இது பற்றிய தவறான கருத்துகள் மக்கள் மத்தியில் பரப்பப்படவே, மக்கள் பயந்து போய் தங்களது வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை எடுக்க வங்கியில் குவிந்துள்ளனர்.
என்பிஆர் கடிதமும் ஒரு ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்
அவ்வங்கி வெளியிட்ட விளம்பரத்தில் கேஓய்சி சரிபார்ப்புக்கான ஆவணங்களில், என்பிஆர் கடிதமும் ஒரு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது விரைவில் காயல்பட்டினம் கிராமம் முழுவதும் பரவ, கிராம மக்களிடையே ஒரு பீதியை கிளப்பியுள்ளது. ஏனெனில் கட்டாயம் என்பிஆர் கடிதம் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் பரவியுள்ளது. இதனால் காயல்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கிளையை அடைந்து தங்கள் பணத்தை திரும்ப பெற்றுள்ளதாக அவ்வங்கி அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் தவித்த மக்களுக்கு, மீண்டும் அது போல நடந்து விடுமோ என்ற அச்சத்திலியே வங்கியை நாடியுள்ளனர். இதனால் இந்த அறிவிப்பு வெளியான பின் ஒரே நாளில் 1 கோடி ரூபாயுக்கும் மேல் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுத்ததாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளம்பரம் வெளியீடு?
இது குறித்து அந்த வங்கி மூத்த அதிகாரிகள் தரப்பில், கேஒய்சி படிவம் மூலம் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு ஒழுங்குபடுத்துவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தான், இவ்வங்கியின் மும்பை தலைமை அலுவலகம் சார்பில் ரிசர்வ் வங்கி நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகள் தொடர்பாக கடந்த ஜன.11ம் தேதி பொது அறிவிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது.
எதற்காக விளம்பரம்?
இந்த விளம்பரத்தில் அண்மையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி ஆவணங்கள் சமர்ப்பிக்காது இருந்தால், அதனை உடனடியாக சமர்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். தங்களது கணக்கு தடைபடாத சேவைக்கு, கேஒய்சி படிவத்தின் படி அடையாளச்சான்று மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் என்பிஆர் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் ஜனவரி 31, 2020க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காத வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களை சமாதானம் செய்ய முயற்சி
இது குறித்து வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களை எவ்வளவோ சமாதான படுத்த முயன்றும் மக்கள் சமாதானம் ஆகவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த வங்கிக் கிளையில் பெரும்பாலும் முஸ்லிம்கள் வங்கி கணக்கு வைத்திருந்தாகவும், அவர்கள் பயத்தில் முழுப்பணத்தையும் எடுத்துக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
என்பிஆர் அவசியம் இல்லை
இது குறித்து பேங்க் ஆப் பரோடா அதிகாரி ஒருவர் கேஒய்சி ஆவணங்களில் நாங்கள் என்பிஆர் கடிதங்களை சேர்க்கவில்லை. இல்லாத ஒன்றை சேர்ப்பதில் அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார். இதே இது குறித்து சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் துணை பொது மேலாளர் ஆர் எல் நாயக் மக்கள் இதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏதேனும் ஒரு ஆவணம் இருந்தால் போதும்
ஏனெனில் நாங்கள் கோரிய கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது. அது ஆதார் கார்டாகவோ, அல்லது வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால் போதும். பொதுவாக ஆதார்கார்டு இல்லாதவர்களிடம் தான் வேறு ஏதேனும் ஒன்றை ஆதாரமாக கேட்போம். அதிலும் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உத்தரவாத அட்டைகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று. ரிசர்வ் வங்கி சமீபத்தில் கேஒய்சி பட்டியலில் என்பிஆர் கடிதத்தையும் சேர்த்த பிறகு, அதை யாராவது ஒருவரேனும் கொண்டு வந்தாலும் அதை மறுக்க முடியாது என்பதால் தான், அதையும் விளம்பரத்தில் சேர்த்தோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
மக்கள் அச்ச பட வேண்டாம்
ஆக மக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டாம். என்பிஆர் கடிதம் இல்லாவிட்டால் நம் வங்கி கணக்கு முடங்கி விடும். இதனால் நம் பணத்தை எடுக்க முடியாமல் போய்விடும் என்ற தவறான சிந்தனைக்கும் போக வேண்டாம். தவறாக பரவும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.