பொதுத்துறை வங்கி நிறுவனமான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தங்களது 13 சதவீத வங்கி கிளையை மூட இருப்பதாக அறிவித்துள்ளது, பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் இயங்கி வரும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 வங்கி கிளைகளை மூட உள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 4,594 கிளைகளுடன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் 282 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய போதிலும் 15.16% வாராக் கடன்களைக் கொண்டுள்ளதால் இந்த வங்கி நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கை
2017-ம் ஆண்டு ஜூன் முதல் இந்த வங்கி வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக நஷ்டம் அடைந்து வந்தது. எனவே இந்த வங்கியைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வந்தது. ஆனால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை தவிர, அதுனுடன் சேர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கிய அனைத்து வங்கிகளும் சிறப்பாகச் செயல்பட்டு அதிலிருந்து வெளியேறின.
சொத்துக்கள் விற்பனை
நிதி நெருக்கடியை சரி செய்ய வங்கிக்குச் சொந்தமான செயல்படாத சொத்துக்களை விற்று நிதி திரட்டவும் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் இந்த வங்கியின் நிதி நிலையைச் சரி செய்ய முடியவில்லை.
வங்கிக் கிளைகள் மூடல்
இதனால் வங்கியை மேம்படுத்தும் வகையில் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.