கடந்த ஆண்டு முழுவதுமே உலக அளவில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கியதுதான். சீனா , போலந்து உட்பட உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய நாட்டின் நாணயத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவின் வரி மோதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் அதிகபட்சமாக தங்கத்தை வாங்கி கையிருப்பு வைக்க தொடங்கின.
வழக்கமாக தங்க சந்தையில் நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள்தான் அதிக தங்கத்தை வாங்கும் ஆனால் கடந்த ஆண்டு அது அப்படியே மாற்றம் கண்டது. நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களை விட மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி குவித்தன. இது தங்க சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து தங்கத்தின் விலையை உச்சாணிக்கு கொண்டு சென்றது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.

வழக்கமாக ஒரு போர் பதற்றம் ஏற்பட்டால் தங்கத்தின் விலை தான் அதிகரிக்கும். ஏனெனில் பாதுகாப்பான முதலீடு என்பதால் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை தான் வாங்குவார்கள். ஆனால் ஈரான் போர் தங்கத்தை மதிப்பிழக்கச் செய்து டாலரையும் கச்சா எண்ணையும் உச்சாணிக்கொம்பில் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்து, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
டாலர் வலுப்பெறும் போதெல்லாம் தங்கம் சரியும், அது தான் தற்போதும் நடக்கிறது. சமீபகாலமாக தங்கத்தின் விலை குறைவதற்கு ஈரான் போர் மட்டுமே காரணம் அல்ல மத்திய வங்கிகள் கையில் எடுத்த மற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையும் காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போது தங்க சந்தையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கி இருக்கின்றன.
ரஷ்யா தன்னுடைய பொருளாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஆறு டன் தங்கத்தை வெளிச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்திருக்கிறது. அதேபோல துருக்கியும் எட்டு டன்கள் தங்கத்தை விற்பனை செய்திருப்பதாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் துருக்கியின் வசம் 613.70 டன்கள் தங்கம் கையிருப்பு இருந்தது.
துருக்கியில் பல ஆண்டுகளாகவே பணவீக்கம் பிரச்சனை அதிகரித்து இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு வேகமாக சரிவடைந்து வருகிறது. எனவே கையில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து நாட்டின் நிதி நிலைமையை சீர்படுத்தி வைத்திருக்கிறது துருக்கி அரசு.
ரஷ்யாவும் உக்ரைன் போரால் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டு கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருந்தது. இந்தியா ,சீனாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தாலும் எதிர்பார்த்த வருமானம் ரஷ்யாவுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ரஷ்யா தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை படிப்படியாக விற்பனை செய்து நாட்டின் நிதி நிலைமையை சீர் செய்து வருகிறது.
இப்படி உலகின் இரண்டு முன்னணி நாடுகள் தங்கச் சந்தையில் வாங்குபவர்களாக இருந்து விற்பனை செய்பவர்களாக மாறி இருப்பது தங்கத்திற்கான டிமாண்ட் குறைவதற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. அப்படியே இருந்தாலும் செக் ரிபப்ளிக் ,மலேசியா, கம்போடியா, சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து மத்திய வங்கிகள் மூலம் தங்கத்தை அதிக அளவு வாங்கிய வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சராசரியாக மத்திய வங்கியில் 26 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன, ஆனால் 2026 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 12 டன்கள் என குறைந்திருக்கிறதாம். அந்த வகையில் மத்திய வங்கிகள் தற்போதைக்கு தங்கத்தை வாங்குதை நிறுத்தியுள்ளதும், சில நாடுகளின் வங்கிகள் விற்பனை செய்வதும் நிகழ்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ரிசர்வ் வங்கியை 880.3 டன்கள் தங்கத்தை வைத்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் 0.13 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கிறது பிப்ரவரியில் தங்கமே வாங்கவில்லை என்கிறது உலக தங்க கவுன்சில்.


Click it and Unblock the Notifications