டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை அதிகம் விவரிக்க வேண்டாம். அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அரசை நெருக்கடிக்கு ஆளாக்கும் மற்றொரு விஷயம் நிதி நெருக்கடி.
மத்திய அரசு கணிப்பின் படி, வரி வருவாய்கள் சரியாக வரவில்லை. இந்த வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு பயங்கரமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய அரசு நிறுவனங்களிடம் கூடுதலாக ஈவுத் தொகையைக் கேட்கத் தொடங்கி இருக்கிறதாம்.
காசு கொடு
ஏற்கனவே மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் சுமாராக 35,000 - 45,000 கோடி ரூபாய் கேட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. அரசின் கோரிக்கையை, மத்திய ரிசர்வ் வங்கி ஒரு விதி விலக்கான ஆண்டாகக் கருதி, ஒரு இடைக்கால ஈவுத் தொகை (Interim dividend) கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.
அரசு நிறுவனங்கள்
தற்போது, மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கியைத் தாண்டி, மத்திய அரசு நிறுவனங்களிடமும் கூடுதலாக ஈவுத் தொகை (Dividend) கேட்கத் தொடங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 5 % கூடுதலாக ஈவுத் தொகையைக் கேட்டு இருக்கிறார்களாம்.
எவ்வளவு தொகை
ஓ என் ஜி சி, இந்தியன் ஆயில், கெயில், ஆயில் இந்தியா, பாரத் பெட்ரோலியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் இருந்து 19,000 கோடி ரூபாயை ஈவுத் தொகையாகக் கேட்கிறது மத்திய அரசு. இவைகள் எல்லாமே மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் தானே..? இவர்கள் அரசுக்கு பணம் கொடுத்தால் என்ன..? என்று கேட்கலாம். அங்கு தான் சிக்கலே..!
சிக்கல்
இந்த மத்திய அரசு நிறுவனங்கள் எல்லாமே கடந்த 2018 - 19 நிதி ஆண்டை விட 2019 - 20 நிதி ஆண்டில் குறைவான லாபத்தையே சம்பாதித்து இருக்கின்றன. இந்தியன் ஆயில் கடந்த 2018 - 19 அரையாண்டை விட சுமார் 59 சதவிகிதம் குறைவாக லாபத்தை ஈட்டி இருக்கிறது. அதே போல கெயில் நிறுவனமும் சுமார் 27 சதவிகிதம் குறைவான லாபத்தையே ஈட்டி இருக்கின்றன.
லாபம் மற்றும் சரிவு விவரங்களை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.
| மத்திய அரசு நிறுவனங்களின் லாபம் சரிவு விவரங்கள் | |||
|---|---|---|---|
| நிறுவனங்களின் பெயர் | 2019 - 20 (ஏப்ரல் - செப்டம்பர்) (கோடி, ரூ) | 2018 - 19 (ஏப்ரல் - செப்டம்பர்) (கோடி, ரூ) | சரிவு (%) |
| இந்தியன் ஆயில் | 4,159 | 10,078 | -59 |
| கெயில் | 2,352 | 3,222 | -27 |
| பாரத் பெட்ரோலியம் | 2,783 | 3,511 | -21 |
| ஆயில் இந்தியா | 1,252 | 1,565 | -20 |
| ஓ என் ஜி சி | 12,167 | 14,408 | -16 |
| இன்ஜினியர்ஸ் இந்தியா | 192 | 184 | 4 |
நிதி நெருக்கடி
மத்திய அரசு நிதி நெருக்கடியில் தவிப்பது போல, இப்போது மத்திய அரசு நிறுவனங்களுக்கும் , குறைவாகவே லாபம் வந்து கொண்டு இருக்கின்றன. தங்களுக்கு வரும் குறைவான லாபத்தைக் கூட மத்திய அரசிடம் பகிர்ந்து விட்டால், மத்திய அரசு நிறுவனங்கள் நாளை செலவு செய்ய போதுமான பணம் கிடைக்காமல் போகலாம். நாளை மத்திய அரசு நிறுவனங்களுக்கு ஏதாவது பணத் தேவை என்றால், வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
எனவே மத்திய அரசும், மத்திய அரசு நிறுவனங்களும் மிக நெருக்கடியான சூழலில் தான் நிற்கிறது.


Click it and Unblock the Notifications