மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் 2022ஆம் ஆண்டு மே 31 வரை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதன்மூலம் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி தொகை விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொகையின் மூலம் மாநிலங்கள் தங்கள் வளங்களை நிர்வகிக்கவும் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், மூலதனச் செலவுகள் செய்யவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை
மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிகளவில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை நிறுத்தி வைத்துள்ளதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது மத்திய அரசு அதிரடியாக மே 31 ஆம் தேதி வரையிலான அனைத்து நிலுவைத் தொகையையும் விடுவித்துள்ளது.
மத்திய அரசு
இதற்காக ரூபாய் 20 ஆயிரம் கோடி மட்டும் இருந்தாலும் நிலுவைத் தொகையை சரிகட்ட மத்திய அரசு தனது சொந்த பணத்தில் கூடுதலாக எடுத்து விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மே 31 வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை விடுவிக்கப்பட்டதால் அடுத்ததாக ஜூன் மாத இழப்பீடு மட்டுமே மீதம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 31 ஆம் தேதி வரையிலான இழப்பீடு தொகையை விடுவிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு அனைத்து மாநிலங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டபோது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவாதம் தெரிவித்திருந்தது. இந்த ஐந்து ஆண்டு காலகட்டம் என்பது இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. எனவே ஜூன் மாதத்திற்கு பின்னர் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கப்படுமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
இழப்பீடு
மேலும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சில குறிப்பிட்ட பொருட்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டது என்பதும், அந்தச் செஸ் வரியில் இருந்து கிடைத்த தொகை நிலுவை தொகைக்காக வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ் வரி
மேலும் செஸ் இருந்து கிடைத்த வருமானத்தை வைத்து மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒருவேளை ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்தினால் செஸ் வரி விதிக்கப்படுவதும் நிறுத்தப்படுமா? அல்லது தொடர்ந்து செஸ் விதிக்கப்படுமா? என்பது குறித்த எந்தவித தகவலும் மத்திய அரசிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை. இது குறித்த அறிவிப்பு விரைவில் கூட இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
இந்த நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்ததில், தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவை தொகையான 9,602 கோடி விடுவிக்கப்பட்டது. எனவே தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவை தொகையும் விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications