உலக நாடுகளில் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நம் கண் முன்னே பார்த்து வருகிறோம், இது கொரோனா தொற்று காரணத்தால் ஏற்படும் மாற்றமா அல்லது தேவையின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றமா என்பது பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு உதாரணமாகக் கடந்த வருடம் வரையில் உலக நாடுகள் அனைத்தும் வெறுத்து ஒதுக்கி வந்த நிலக்கரி இன்று குறைந்த விலையில் கிடைக்காதா என்று ஏங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றம்
உலகில் அனைத்து நாடுகளும் கடந்த 5 வருடமாகப் பருவநிலை மாறுவது குறித்து அதிகளவில் ஆய்வு மற்றும் ஆலோசனை செய்து பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டு வருவது மட்டும் அல்லாமல், பருவநிலையைப் பாதிக்கும் பல விஷயங்களைப் பயன்படுத்துவதும், அதன் மீது முதலீடு செய்வதும் குறைக்கப்பட்டு வருகிறது.
இரு முக்கியமான விஷயங்கள்
இப்படிக் குறைக்கப்பட்ட இரு முக்கியமான விஷயங்கள் 1. கச்சா எண்ணெய் உற்பத்திக்கான புதிய முதலீடுகள் நிறுத்தப்பட்டது 2. நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் மற்றும் இதர எனர்ஜியை பயன்படுத்துவதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று
இந்த முடிவிற்குக் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்த நிலையில் அனைத்தும் சரியாக நடந்து வந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்று வந்து மொத்த உலகப் பொருளாதாரத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
தேவை அதிகரிப்பு
கொரோனா தொற்று முடிந்த மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில் அனைத்தும் எரிபொருள், மின்சாரத்தின் தேவை அதிகரித்தது. இதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல முக்கியமான பொருட்களின் தேவை தாறுமாறாக அதிகரித்து விலையும் உயரத் துவங்கியது.
தீபாவளி டூ தீபாவளி
இதன் எதிரொலியாக இந்தத் தீபாவளிக்கும், கடந்த தீபாவளிக்கும் ஒப்பிடுகையில் உலக நாடுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலக்கரியின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா நிலக்கரி விலை 188 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதேவேலையில் புதிய உற்பத்திக்கான முதலீட்டைத் தடை செய்த கச்சா எண்ணெய் விலை 95 சதவீதம் அதிகரித்தது.
தங்கம் வெள்ளி
இதே காலகட்டத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட தங்கம் விலை 4.7 சதவீதமும், வெள்ளி விலை 2.9 சதவீதமும் குறைந்துள்ளது. இதன் மூலம் நிலக்கரி தற்போது கருப்புத் தங்கமாக மாறியுள்ளது, நிலக்கரி மீதான தட்டுப்பாடு அடுத்த சில காலாண்டுகளுக்கு இருக்கும் என்பது உலக நாடுகளில் கணிப்பு என்பதால் இதன் விலை விரைவில் குறையாது.
சென்செக்ஸ் குறியீடு
இதேவேளையில் இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 37.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. காமாட்டி சந்தையில் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டு உள்ளதோ அதே அளவிற்குப் பங்குச்சந்தையிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.