முதலீட்டு சந்தைக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானது, ஒருப்பக்கம் ஈரான் போர் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், ஹார்முஸ் வழித்தடத்தில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்புமா என்பது ஓமன் நாட்டுடன் ஈரான் நடத்தியுள்ள பேச்சுவார்த்தை மூலம் தெரிய வரும்.
இதைதொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த வாரம் ஜூலை 28,29ஆம் தேதி நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து எடுக்கப்படும் முடிவுகள் முதலீட்டு சந்தையை தலைகீழாக புரட்டிப்போட உள்ளது.

இதற்கிடையில் ஏஐ பங்குகள் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் - வெள்ளி மீதான முதலீடு வேகத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் என பல முக்கியமான விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளதால் மிகவும் முக்கியமான வாரமாக இந்த ஜூலை மாத கடைசி வாரம் இருக்கப்போகிறது.
இவை அனைத்தும் இந்திய சந்தையை பாதிக்கும் என்பது தான் அடுத்த முக்கியமான விஷயம், இந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கு லாபத்தையும் அளிக்கலாம் அல்லது பெரும் சரிவுக்கும் கொண்டு செல்லலாம்.
தற்போதைய வர்த்தக சந்தையின் நிலைவரம் என்னவென்றால், டாலர் இன்டெக்ஸ் தொடர்ந்து 101.30க்கு அதிகமாகவே உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதற்கு முக்கியமான காரணம் இந்த வாரம் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என கணிக்கப்புகள் வெளியானதன் எதிரொலி.
இதேவேளையில் ஈரான் போர் தற்போது மிகப்பெரியதாக வெடித்திருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்க அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக CME FedWatchTool தரவுகள் படி வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் கூட்டத்தில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் 80 சதவீதமாக உள்ளது.
அமெரிக்கா தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் இந்திய உட்பட உலக நாடுகளும் வட்டி விகிதத்தை அதிகரித்து பெரும் தாக்கத்தை முதலீட்டு சந்தையில் ஏற்படுத்தும். குறிப்பாக பங்குச்சந்தையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அடுத்தாக தங்கம், ஈரான் போர் துவங்கியதில் இருந்து மொத்தம் 21 வாரங்கள் முடிந்துள்ளது, இதில் வெறும் 7 வாரத்தில் மட்டுமே தங்கம் விலை உயர்வுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழணை அமெரிக்க வர்த்தக சந்தைய முடப்பட்ட போது ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4050 டாலருக்கு முடிந்துள்ளது. இது கடந்த வார உயர்வுடன் ஒப்பிடுகையில் சுமார் 1 சதவீதம் அதிகமாகும். இதேபோல் வெள்ளி கடந்த வாரத்தில் 4 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 58 டாலராக உள்ளது.
இந்த வாரம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம், வெள்ளி விலை மேலும் சரியக்கூடும். இதற்கிடையில் ஈரான் போர் தற்போது ஹார்முஸ், செங்கடல் தாண்டி கசகிஸ்தான் நாட்டின் அருகில் இருக்கும் காஸ்பியன் கடல் வரையில் விரிவடைந்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலையிலும், சப்ளையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளின் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications
