கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபம் பலருக்குக் கிடைத்தாலும், பலர் இதில் இருந்து நஷ்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் கிரிப்டோகரன்சி முதலீட்டு சந்தைக்கும் இளம் மற்றும் புதிய முதலீட்டாளர்களைக் கவரும் சக்தி உள்ளது.
இதனாலேயே இந்தியா முழுவதும் கிரிப்டோகரன்சி பெயரில் பல மோசடிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இரு இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பலர் ஏமாற்றி ஐபோன், பார்ட்டி எனச் செலவு செய்து கொண்டாடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரூ.26,230 மோசடி
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுக்காவில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த கிரண் பரதேஷ் மற்றும் அர்ஷத் மொஹிதீன் ஆகிய இருவரும் கல்லூரி மாணவரிடம் ரூ.26,230 மோசடி செய்ததாகப் பெங்களூருவின் வடகிழக்கு CEN குற்றப்பிரிவு காவல் நிலையம் கைது செய்துள்ளது.
கிரிப்டோ முதலீடு
கிரண் மற்றும் அர்ஷத் அதே ராய்பாக் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவனுக்குக் கிரிப்டோ முதலீட்டில் உடனடி லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த இந்த இளைஞனுக்கு லாபமும் கிடைக்கவில்லை, முதலீடு செய்யப் பணமும் கிடைக்கவில்லை.
கைது
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் வடகிழக்கு CEN குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ராம் தலைமையிலான குழு சமீபத்தில் இருவரையும் கண்டுபிடித்தது கைது செய்தது.
10,000 பாலோவர்கள்
இருவரும் வெவ்வேறு பெயர்களில் இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்கிச் சுமார் 10,000 பாலோவர்களைப் பெற்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் கணக்கின் பயோவிலும் தங்களை "இளம் கிரிப்டோ வர்த்தகர்" என்று அறிவித்தது பாலோவர்களைச் சேர்த்துள்ளனர்.
400 சதவீத லாபம்
இந்த இன்ஸ்டாகிராம் கணக்குகள் வாயிலாகக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும்படி மக்களைக் அழைத்தது மட்டும் அள்லாமல், 60 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை வெறும் "10-30 நிமிடங்களுக்குள்" வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்தது விளம்பரம் செய்துள்ளனர்.
முதலீடாளர்களின் பணம்
மேலும் இந்தப் போலி கணக்குகளில் தங்களது உண்மையான கணக்குகள் வாயிலாக முதலீடு செய்துள்ளதாகவும், லாபம் கிடைத்துள்ளதாகவும் மெசேஜ் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள் பல முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை ஏமாற்றியுள்ளதாகப் போலீசார் கூறுகின்றனர்.
ஐபோன், பார்ட்டி
இந்த மோசடி பணத்தில் இருந்து, கைது செய்யப்பட்ட இருவரும் தலா ஒரு ஐபோனையும், இரண்டு வங்கி கணக்குகளில் ரூ.40,000 பணத்தையும், மீதமுள்ள தொகையில் பிராண்டட் டிரஸ் மற்றும் பார்ட்டிக்குச் செலவு செய்துள்ளனர். ஐபோன்கள், வங்கி இருப்பு மற்றும் மூன்று சிம் கார்டுகளைத் தற்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.