மத்திய பட்ஜெட் 2023-க்கான ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் இன்று முதல் நடத்த உள்ள நிலையில், இந்தியாவின் தொழிற்துறை அமைப்பான CII வருமான வரியை முதலில் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை முதல் பட்ஜெட்டுக்கு முன்பு தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஆலோசனை கூட்டங்களைத் தொடங்குகிறார்.
பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு தேவையான 2023-24 பட்ஜெட் தயாரிப்பிற்கான பரிந்துரைகள் குறித்து இக்கூட்டத்தின் மூலம் நிர்மலா சீதாராமன் பெறுவார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை பட்ஜெட் முந்தைய ஆலோசனை கூட்டத்தைத் துவங்கியுள்ள நிலையில் தொழிற்துறை அமைப்பான CII முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது. இந்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரியைக் குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியை குற்றமற்றதாக்குதல் மற்றும் மூலதன ஆதாய வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது.
கடைசி முழுப் பட்ஜெட்
2024 ஆம் பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில் தற்போதைய மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் அறிக்கை 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவது தான். இதனால் இந்தப் பட்ஜெட் அறிக்கை மோடி அரசுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
தனிநபர் வருமான வரிக் குறைப்பு
தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்க அரசாங்கம் சிந்திக்க வேண்டும், இது தான் இந்தியாவில் சீர்திருத்தங்களுக்கான அடுத்த கட்ட உந்து சக்தியாக இருக்கும். வருமான வரியைக் குறைப்பது மூலம் மக்களிடம் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் டிமாண்ட் அளவில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என CII அமைப்பின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் இக்குறிப்பில் கூறினார்.
ஜிஎஸ்டி வரிப் பிரிவு
28 சதவீத ஜிஎஸ்டி வரிப் பிரிவில் இருக்கும் முக்கியமான நுகர்வோர் பொருட்கள் மீதான வரியைக் குறைப்பது வாயிலாகவும் நாட்டின் நுகர்வு அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரிக்க முடியும். மேலும் கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது எனச் சஞ்சீவ் பஜாஜ் கூறியுள்ளார்.
கைது
ஒருவர் தனது வர்த்தகத்தில் செய்த குற்றச் செயல்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத வரையில், சிவில் வழக்குகளில் கைது செய்வதோ அல்லது காவலில் வைக்கப்படுவதோ கூடாது என்று CII அமைப்பின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பட்ஜெட் ஆலோசனை கூட்டம்
திங்கட்கிழமை முதல் துவங்க இருக்கும் இந்தப் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் நாளான நவம்பர் 21 ஆம் தேதி உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஆலோசனை செய்து இப்பிரிவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பரிந்துரைகளைப் பெற உள்ளார்.
விவசாயம், அக்ரோ பிராசசிங்
நவம்பர் 22 ஆம் தேதி விவசாயம், அக்ரோ பிராசசிங் துறை சார்ந்து நிதியியல் மற்றும் முதலீட்டு சந்தை நிபுணர்களைச் சந்திக்க உள்ளார். நவம்பர் 24 ஆம் தேதி சுகாதாரம், கல்வி, தண்ணீர் மற்றும் துப்புரவு ஆகிய துறை சார்ந்த நிபுணர்களைச் சந்திக்க உள்ளார். நவம்பர் 28ஆம் வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களைச் சந்திக்க உள்ளார்.
2023 பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்
2023 பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாகும், உலக நாடுகளின் பொருளாதாரம் ரெசிஷன் காரணமாக மோசமான நிலையை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் பட்ஜெட் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.